தேசியக்கொடி விவகாரம்! இனவாதத்தின் உச்சக்கட்டம் - அரியநேத்திரன்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை இனத்தவரை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அகற்றப்பட்ட தேசிய கொடியை முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்த நிகழ்வினை இனவாதத்தின் உச்சக்கட்டமாகவே நாம் கருதுகிறோம்.
என தெரிவித்த தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தேசிய கொடியை மாற்றியமைத்தல் நாட்டின் இறைமையைப் பாதிக்கும் செயலாகும். இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததன் காரணமாக நாங்கள் தமிழன் என்ற பெயருடன் எங்கள் நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தந்தை செல்வா வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டைக் கூட அவர் வடக்கிலே நடத்தவில்லை. திருகோணமலையில் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
எமது மக்களின் உரிமைப் போராட்டங்கள் பலவற்றை தமிழரசுக் கட்சி முன்னெடுத்துள்ளதை நாங்கள் அனைவரும் அறிவோம். தந்தை செல்வாவின் அகிம்சை ரீதியான போரட்டத்திற்கு அன்றிருந்த அரசாங்கங்கள் சரியான தீர்வொன்றை வழங்கியிருந்தால் ஆயுதப் போராட்டம் உருவெடுத்திருக்காது.
2010 ஆம்ஆண்டுக்கு பின்பு வந்த அனைத்து தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்து எமக்கு பாரிய பலத்தினை ஏற்படுத்தியுள்ளீர்கள். இதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இன்னும் இனவாதம் இருந்து கொண்டிருப்பதை அண்மைக்காலங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் மூலம் தெளிவாக உணர முடிகிறது. இலங்கையில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றார்கள் என்ற அடையாளத்துடன் உருவாக்கப்பட்ட தேசிய கொடியில் சிறுபான்மையினருக்குரிய செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை அகற்றி விட்டு அந்த கொடியை முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு கொண்டு செல்கின்றார்கள் என்றால் அவர்களின் மனோநிலை எவ்வாறுள்ளது என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் செயலாகும். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.