மும்பையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது சென்னை
எட்டாவது ஐ.பி.எல். போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நாளை மோதுகின்றது.
முதலாவது இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்றில் சென்னையும் – மும்பையும் மோதியது. இந்தப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை இறுதிப்போட்டிக்கு முதலாவது அணியாகத் நுழைந்தது.
அதைத் தொடர்ந்து நீக்கல் சுற்றில் நேற்று பெங்களூர் அணியை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று நேற்றிரவு 8 மணிக்கு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது.
இதில் சென்னை-–பெங்களூர் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல், கோஹ்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெங்களூர் அணி வீரர்கள் தடுமாறினர்.
போட்டியின் 5ஆ-வது ஓவரை நெஹ்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோஹ்லி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்காக களமிறங்கிய மற்றொரு அதிரடி வீரரான டிவிலியர்ஸ் அதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த சந்தீப் சிங் 8-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூர் அணி 7.1 ஓவரில் 36 ஓட்டங்களை எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. மறுபக்கம் அதிரடி வீரர் கெய்ல் நின்றாலும் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. சுரேஷ் ரெய்னா 14-ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்த கெய்ல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கெய்ல் 43 பந்துகளில் 41 ஓட்டங்களை மட்டுமே அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.
அதன்பின் வந்த இளம் வீரர் சர்பராஷ் கான் 21 பந்தில் 31 ஓட்டங்களை எடுக்க பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் நெஹ்ரா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
140 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஸ்மித் மற்றும் ஹசி ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் ஸ்மித் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஹசி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களை விளாசினார். அடுத்ததாக பிளசிஸ் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஓட்டமேதும் பெறாத நிலையில் வந்தவேகத்திலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அணித் தலைவர் தோனியும், நேகியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றி ஐந்து ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது நெகி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பிராவோ களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப ஜடேஜா களமிறங்கினார்.
இறுதியில் வெற்றிக்கு மூன்று பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தபோது தோனி 26 ஓட்டங்களுடன் ஆட்ட மிழக்க, அடுத்துக் களமிறங்கிய அஸ்வின் அந்த ஒரு ஓட்டத்தைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தார். பெங்களூர் அணி சார்பாக பந்துவீசிய சஹால் இரண்டு விக்கெட்டுக் களையும், அர்விந்த் மற்றும் விஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.