ஜெ.க்கு எதிராக யாருமே மேன்முறையீடு செய்யாவிட்டால் அதை நாம் செய்வோம் - விஜயகாந்த்
ஜெயலலிதாவுக்கு எதிராக யாரும் மேன்முறையீடு செய்யா விட்டால் அதை தே.மு.தி.க. செய்யும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவர், இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனிபோல்” தெரிய வருகிறது. உச்சநீதிமன்ற நீதியரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி குமாரசாமி கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை. மாறாக ஏதோ ஒரு அழுத்தத்தில்தான் இது நடந்திருப்பதாக யூகிக்க முடிகிறது.
இதற்கு முன்பு அரசு ஊழியர்களான பி.எஸ் அதிகாரி ஜெகன்சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 ஆயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு, தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல் போனது ஏன்? என்பது மில்லியன் டொலர் கேள்வியாகும். பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினால் அதிகார பலமும், பணபலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இது போன்ற தருணங்களில்தான் நிரூபிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவிற்கு எதிரான இந்த வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா ஆதார ஆவணங்களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளார். அதனால்தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார்? இவரை நீதியரசர் என சொல்ல முடியுமா? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள். எனவே, கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேன்முறையீடு செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தே.மு.தி.க . மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.