"யார் வேண்டுமானாலும் இராஜினாமா செய்யலாம்''
யாருக்கு வேண்டுமென்றாலும் எந்தவொரு பதவியில் இருந்தும் இராஜினாமா செய்து கொள்ள முடியும். நான்கு அமைச்சர்களின் பதவி விலகலானது அவர்கள் இந்த அரசாங்கத்தின்பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுகின்றது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி முழுமனதுடன் இருந்து செயற்படும்.
இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதனால் யார் விலகிச் சென்றாலும் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. தாம் வகிக்கும் பதவிகளிலிருந்து யாருக்கு வேண்டுமென்றாலும் இராஜினாமா செய்து கொள்ள முடியும். நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமையானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுகின்றது என்றார்.