மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை உண்டு - சம்பந்தன்
சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை - நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதித் தவிசாளரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, தமிழசுக் கட்சி இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன, செங்கலடி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் வ.கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு சம்பந்தன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
1972ம் ஆண்டு அரசியல்சாசனம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்க வேண்டும் என, தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம் ஊடாக கேட்டார்.
அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் நிமிர்த்தம் 1976ம் ஆண்டு தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடணத்தைச் செய்வதற்கு சம்மதித்தார்.
வட்டுக்கோட்டைப் பிரகடணத்தைச் செய்வதற்கு முன்பதாக பாராளுமன்றத்திலே தனது பதவியை இரத்துச் செய்து, இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உங்கள் அரசியல்சாசனத்தை நிராகரிக்கிறார்கள் அதனைச் சோதிப்பதற்காக எனது பாராளுமன்ற பதவியை துறந்து எனது தொகுதியில் போட்டியிடத் தயார் நீங்கள் எதிர்த்து அதனைப் பொய் என்று நிருபிக்கலாம் என சாவால் விட்டார்.
அந்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். பிரிவினையை நாங்கள் கோரவில்லை கோரும் நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம், ஆனால் எனது மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்குமாகவிருந்தால் அதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், அதை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என தந்தை செல்வா அடிக்கடி கூறுவார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு தந்தை செல்வா 1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இறந்தார். பின்பு நாங்கள் 18 பேர் பாராளுமன்றத்துக்குச் சென்றோம். அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக வந்தார். பல வெளிநாட்டுத் தலைவர்களுடன் இராஜதந்திரிகளுடன் எமது பிரச்சினைகள் தொடர்பாக மிக ஆழமான பேச்சுவார்தைகள் நடாத்தினோம்.
இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து பேசியபோது, நீங்கள் பிரிவினையைக் கோரினால் ஆதரிக்க முடியாது ஒரு சுயாட்சி முறையைக் கோரினால் நாங்கள் நிச்சயமாக ஆதரிப்போம் என அவர் கூறினார்.
அவர் இறந்த பின் பிரதமர் ரஜீவ் காந்தியுடைய காலத்தில் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மாகாண சபை உருவாக்கப்பட்டு முதல்முறையாக மாகாண ரீதியாக ஓரளவிற்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டது.
இதில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாகாணங்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டன. தற்பொழுது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருகிறது.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தமிழ் மக்கள் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய சக்தியாக இருந்துகொண்டிருந்தார்கள் அவர்களுடைய கருத்தை மீறி எதையும் செய்வது ஒரு கடினமான விடயம். அவர்களும் ஒரு அரசியல் தீர்வுக்குவரச் சம்மதம் என்று கூறிய பின்பும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை.
ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ஒஸ்லோ பிரகடணம் கொண்டுவரப்பட்டு, தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒருமித்த நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவு அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் முன்வைக்கப்பட்டது அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பல பேச்சுவார்தைகள் நடைபெற்றன, ஒரு நாட்டுக்குள் ஒற்றை ஆட்சியுடன் தீர்வை காணுவதற்கு நாங்கள் முயற்சித்தோம், ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை, எங்களை ஏமாற்றுவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொண்டார்.
அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக் குழுவில் எங்களை பங்கெடுக்கச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளுக்கும் நாங்கள் இடமளிக்கவில்லை. மக்களின் ஜனநாயக முடிவின் ஊடாக தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தியதன் அடிப்படையில் நாட்டில் தற்போது பாரிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மக்களுடைய ஜனநாயக சக்தியை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நாட்டில் பிரச்சினைகள் தொடர் கதைகளாக இருக்க முடியாது, ஒருகால கட்டத்தில் முடிவு வரவேண்டும் எம்மைப் பொறுத்தவரை முடிவு வர வேண்டிய காலம் வந்துவிட்டது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி நடந்ததன் காரணமாக தற்போது இலங்கை அரசாங்கம் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது. அந்த விடயம் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த விசாரணை அறிக்கை பங்குனி மாதம் வெளியிட்டிருக்க வேண்டும் இலங்கை அரசாங்கத்தின் எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையில் அது பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே நாங்கள் ஒரு பாராளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து நிற்கின்றோம். அந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்ற போது, தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் எவ்விதமாக வாக்களிக்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்.
எங்களுடைய கரங்களைப் பலப்படுத்தக்கூடிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அந்த கடமையில் தமிழ் மக்கள் தவறக் கூடாது. சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்மையை பேசுபவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மை சிங்கள மக்கள் மத்தியில் அவர் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இவ்வாறு சம்பந்தன் கூறியுள்ளார்.