மூன்று நாள் பயணமாக அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஹில்டன் விடுதியில் நாளை ஆரம்பமாகும் சக்தி தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காகவே, கலாநிதி அப்துல் கலாம் இன்று இலங்கை வரவுள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில், கொழும்பு வரும் அவர் எதிர்வரும் 27ஆம் நாள் வரை கொழும்பில் தங்கியிருப்பார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை அவருக்கு மதிய விருந்தளிக்கவுள்ளார்.
அத்துடன் நாளை முற்பகல் 11.30 மணியளவில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், ‘இலங்கையின் எதிர்காலத் தலைவர்கள்’ என்ற தலைப்பில், 1500 பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் கலாநிதி அப்துல் கலாம் உரையாற்றவுள்ளார்.








