Breaking News

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முடிவு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்றும் மைத்திரிபால அரசாங்கத்துக்கு துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது எனவும் முன்னணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் மக்கள் முன்னணி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முன்னணியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தும் என்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அந்த மூத்த உறுப்பினர் கூறினார்.

இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்றும், அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.