தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான, கப்டன் சமந்த முனசிங்கவுக்கு இந்தப் படுகொலையில் தொடர்பு இருப்பதாக, இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன், 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் செல்ல நேவி சமந்தவுக்கு நீதிவான் நிரோசா பெர்னான்டோ அனுமதி அளித்தார். இந்தப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.