Breaking News

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய மீன் வளர்ப்புத் திட்டம்

மட்டக்களப்பு மீனவர்களுக்கு வாவியில் மிதக்கும் கூடுகளில் மீன் வளர்ப்புத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு -கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் செயற்திட்டங்களின் ஒரு கட்டமாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீனினமான கொடுவா மீன்களை வாவியில் வளர்க்கும் இந்தத் திட்டம், அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் நாவலடிப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளுர் மீனவர்கள் மத்தியில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கொடுவா மீன்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது என நீரியல் உயிரியலாளர் சுந்தரம் ரவிக்குமார் தெரிவித்தார். மிதக்கும் கூடுகளில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் 6 மாதங்களில் ஒவ்வொன்றும் 750 கிரம் முதல் 1000 கிராம் எடையுடையதாக வளர்ந்துவிடும் என்பதோடு, சந்தைப்படுத்தலின்போது மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

செலவு குறைந்த முறையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாக வாவியிலும் கடலிலும் பிடிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படாத மீன்களும் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் கழிவுகளுமே கொடுக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் பங்களிப்பு செய்கிறது. தேசிய நீர் வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி அதிகார வாரியம் இதனை செயல்படுத்துகிறது.