மஹிந்த அணியின் வருகையை பெரிதுபடுத்தத் தேவையில்லை - ரவி கருணாநாயக்க
மஹிந்த தலைமையிலான மூன்றாம் அணி ஒருபோதும் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கும் அணியாக திகழாது. அவர்களின் திட்டங்களை முறியடிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். இதன் பிரகாரம் கிராம மட்டத்திலிருந்து கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மும்முரமான முறையில் முன்னெடுத்து வருகின்றோம் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்த அணியின் வருகையை பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை நல்லாட்சிமிக்க திட்டங்களை முறியடிக்கும் வகையில் மஹிந்த தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருவதனை மக்கள் நன்கு அறிவார்கள். இதன்பிரகாரம் மக்களின் ஆணை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெறுவது உறதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மூன்றாவது அணி தோற்றம் குறித்தும் கேசரிக்கு கருத்தும் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றம் இன்னும் சில வாரங்களில் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் மக்களின் பணங்களை சூறையாடியவர்களை ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் நிராகரித்தனர். இருந்த போதிலும் தற்போது பாராளுமன்ற தேர்தல் அண்மையிற்கும் தருணத்தில் மீளவும் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சிப்பீடம் ஏற முனைகின்றனர். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த சிலர் தயாராக வருகின்றனர்.
ஆகவே மூன்றாவது அணி என்ற பெயரில் எம்மை எவராலும் வீழ்த்த முடியாது நாம் பலமான அணியினர். தற்போது கிராம மட்டத்தில் பலமானதொரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை நாம் கொண்டு வர அனைத்து சூட்சமமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
மஹிந்த தலைமையிலான மூன்றாம் அணி ஒரு போதும் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கும் அணியாக திகழாது. அவர்களின் திட்டங்களை முறியடிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். இதனை பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை.
தற்போது பாராளுமன்ற நல்லாட்சிமிக்க திட்டங்களை முறியடிக்கும் வகையில் மஹிந்த தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றும் தருணத்தில் அரசின் திட்டங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதத்தினை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகவே நாட்டு மக்களை ஏமாற்றிய காலம் முடிவடைந்து விட்டது. தேர்தல் வரட்டும் மக்களின் ஆணை யார் பக்கம் உள்ளது என்பது தெரியவரும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை நாம் பெற்றுக் கொள்வோம்அடுத்த தேர்தலில் மக்களின் ஆணை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெறுவது உறதி என்றும் அவர் குறிப்பிட்டார்.