Breaking News

மஹிந்தவின் காட்டாட்சி மீண்டும் வந்துவிடுமா? தமிழ் மக்கள் அச்சத்தில்; மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்சவின் காட்டாட்சி மீண்டும் வராமல் இருப்பதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து செயற்படுவார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவாரா இல்லையா என்பது தொடர்பாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அது நடக்காது என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் வந்து விடுவாரா என்ற அச்சத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இருப்பதாக கூறிய அவர், இந்த நாட்டிலே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்தவர்கள் தமிழ் மக்களே எனவும் கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்ப்பதற்கு எழுதப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எங்களிடம் இருக்கின்றது அது தான் அரசியல் பகவத்கீதை, அது தான் அரசியல் பைபிள், அதுதான் அரசியல் தர்மபதம் ஆகவே மஹிந்த ராஜபக்ச மீண்டும் வரமுடியாதென மனோ கணேசன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் கூறினார்.