செல்வம் – சந்திரகுமார் வாய்ச்சண்டை
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் நேற்று சபைக்குள் கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை விமர்சிக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்தது தவறு என்பதை உணர்ந்திருப்பதாக முருகேசு சத்திரகுமார் எம்.பி கூறியதையடுத்தே இந்த வாய்ச்சண்டை மூண்டது.
இதன்போது மேலும் கூறிய சந்திரகுமார் எம்.பி. புதிய அரசாங்கத்தால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தூண்டியது. அப்படியானால் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளமைக்கான பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும் என்றார்.
செல்வம்
இதன்போது குறுக்கிட்ட செல்வம் அடைக்கலநாதன் அப்படியென்றால் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த சந்திரகுமார் எம்.பி. நீங்கள் புதிய ஆட்சியை ஆதரிக்கின்றீர்கள் ஆனால் உங்களுக்குப் பின்னர் உள்ள உறுப்பினர் புதிய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்றார்.
இதற்குப் பதிலளித்த செல்வம் எம்.பி சரியானதை நாம் சரியென்று கூறுவது போன்று பிழைகளையும் சுட்டிக்காட்டத் தயங்குவதில்லை என்றார். இதன் போது பதிலளித்த சத்திரகுமார் எம்.பி. அப்படியென்றால் நீங்கள் ஏன் புதிய அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் நிறைவேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார்.
இதற்கு பதிலளித்த செல்வம் எம்.பி. நாம் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக நீங்கள் தான் மஹிந்தவுக்கு வால் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றார்.