புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் இராணுவம்
புலம்பெயர் தமிழர்களுடன் இலங்கை அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,
“ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , புலம்பெயர்ந்தோரை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சு சிறந்த நகர்வாகும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.
அரச தரப்பு இவற்றுடன் பேச்சு நடத்தியுள்ளது. இவற்றை நாம் வெளியிலிருந்து கவனித்து வருகிறோம். நாம் இந்த பேச்சுக்களில் பங்கேற்கவில்லை. வடக்கிலிருந்த 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.
2009 ஏப்ரல் முதல் 2014 வரையான காலத்திலே இந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. இவை சிறிய முகாம்களாகும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எந்த முகாமும் அகற்றப்பட வில்லை. இராணுவம் பயன்படுத்திய ஆயிரம் ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டதே இந்த அரசில் நடந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.








