Breaking News

தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரகம் (படங்கள் இணைப்பு)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதுபோல 1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலா ளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி






தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் இன்று புதன்கிழமை காலை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சத்தியாக்கிரகத்தின்போது தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் இம்முறை சம்பள உயர்வில் ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.

நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இதனை பொறுத்துக்கொள்ள எங்களால் முடியாது. இதனாலேயே இன்று நாம் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களான பி.திகாம்பரம், வீ.இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்தத்தில் அதிக சம்பளம் பெற்று தருவதாக கூறிக்கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி மக்களை ஏமாற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இம்முறை பேச்சுவார்த்தையில் கூட அமைதியாக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்காலம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைத்திருந்தாலும் நிறுவன உரிமையாளர்கள் இவருடைய கோரிக்கைகளை செவிசாயிக்காத காரணத்தினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பு இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் ஒரு போதும் தோட்ட தொழிலாளிகளை காட்டி கொடுப்பவர்கள் அல்ல. அப்பாவி தொழிலாளர்களை எமாற்றுவதற்கு யார் நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

வாக்குறுதி வழங்கிய தொழிற்சங்க தலைவர்கள் ஆயிரம் ரூபா பெற்றுகொடுக்காவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம் மட்டும் அல்லாது பாரியளவில் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என மேலும் தெரிவித்தனர்.