முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாகவே இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்பு முடிவடைந்த போது, எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், மாவட்டத் தேர்தல் செயலகங்களின் தகவல்கள் பலவும் முன்னுக்குப் பின் முரணாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை போன்ற மாவட்டங்களில், சுமார் 60 வீதம் வரையான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை காலையில் சுறுசுறுப்பாக வாக்களிப்பு இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 வீதம் வரையான வாக்குகளே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் நிலையங்களில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை ஏற்றிய வாகனங்கள், அங்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் தெகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய வாக்களிப்பு பொதுவாக மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








