Breaking News

மைத்திரியின் பாதுகாப்பை பொறுப்பேற்றது சிறப்பு அதிரடிப்படை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நேற்றுக் காலை தொடக்கம் இலங்கையின் சிறப்பு அதிரடிப்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு குற்றச்செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதையடுத்தும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பில் குறைபாடுகள் காணப்பட்டதையடுத்தும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து. இதுவரையில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வழங்கி வந்த பிஎஸ்டி எனப்படும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு முற்றாக கலைக்கப்பட்டு, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரியாக – சிறப்பு அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா நேற்றுக்காலை பொறுப்பேற்றுள்ளார்.

புதிய பாதுகாப்புத் திட்டத்துக்கமைய. மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு முற்றிலுமாக சிறப்பு அதிரடிப்படையினரால் கையாளப்படும். இந்தப் பணியில் ஈடுபடும் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தனியான சீருடையை அணிந்திருப்பர். அது முன்னர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்ட கருநீல வண்ணம் கொண்ட சபாரி உடைக்குப் பதிலாக, புதிய வண்ணத்திலானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.