Breaking News

கிளிநொச்சியில் காணிப் பிணக்குகள் அதிகரிப்பு-தீர்வு வழங்குமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகரித்துள்ளதாக பிரதேச மற்றும் மாவட்ட காணித் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகளவானதும் முதன்மையானதுமான பிரச்சினையாக காணிப் பிரச்சினையே காணப்படுகிறது.

இதனால் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பொலிஸ் நிலையம், மத்தியஸ்தர் சபை, நீதி மன்றம் என மக்கள் நாளாந்தம் அலைந்து திரிவதாக சுட்டிக்காட்டும் அதிகாரிகள்,

 எதுவித ஆவணங்களும் இன்றி ஒருவரது காணியை இருவர் உரிமை கோருவது, 

ஒருவருடைய காணியை இன்னொருவர் மோசடியாக விற்பனை செய்தல்,


பரம்பரை காணியை பகிர்ந்து கொள்வதில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிணக்கு, 2009 இற்கு முன் உரிய முறைப்படி ஆவணங்கள் எதுவும் மாற்றப்படாது கை துண்டின் அடிப்படையில் விற்பனை செய்துவிட்டு தற்போது உரிய ஆவணத்துடன் மீளவும் உரிமை கோருதல்,


ஒதுக்கீட்டு காணிகளில் குடியிருப்பவர்களிடையே ஏற்படுகின்ற பிணக்கு, அரச காணிகளில் குடியிருப்பதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள்,


வனவளத்திணைக்கள காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஏற்படுகின்ற பிணக்கு, மக்களுக்கு சொந்தமான உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திர காணிகளை இராணுவம் தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதல்,


சில அதிகாரிகளினால் நியாயமற்ற முறையில் காணிப்பிணக்குகளை தீர்வு வழங்கியமையினால் ஏற்படுகின்ற பிணக்குகள். பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமீறி பிடித்தல் போன்ற பலதரப்பட்ட காணிப்பிணக்குகள் கிளிநொச்சியில் காணப்படுகின்றது.


இதனால் மக்களிடையே அடிதடி வெட்டுக்குத்து என பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 

எனவே பொருத்தமான பொறிமுறைக்கு ஊடாக இயலுமான வரை விரைவாகவும் நியாயமாகவும் மக்களின் காணிப்பிணக்குளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.