Breaking News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட16 பேர் கொலைகளுக்கு கோத்தா, கருணா பொறுப்பு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்ட 16 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவுமே கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இதன்போது வெளியிடப்பட்டுள்ள செய்தியில், முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார்.

பின்னர் சட்ட உரிமையற்ற மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார். பொலிஸ் அதிகாரியின் மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம் வரிசைப்படுத்தியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நீலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்ட உரிமையற்ற மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.