Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!



நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமது விடுதலை தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப் போவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துவிட்டது. தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுமார் 217 தமிழ் அரசியல் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், பொதுமன்னிப்புக்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிணை அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் எடுத்துள்ள இந்தத் தீர்மானத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.