Breaking News

தலைகீழாக மாறிய சர்வதேச நிலைப்பாடு- செ.சிறிதரன்


இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள்,
சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்­ப­தற்­காக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான சர்­வ­தேச அள­வி­லான நிலைப்­பாடு இப்­போது தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கின்­றது. குற்­றச்­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்­கத்­தி­னா­லேயே உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் ஊடாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உறுப்பு நாடுகள் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றையில் இருந்து கலப்பு விசா­ரணை பொறி­மு­றைக்கு மாறி, அதில் உறு­தி­யாக இருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் உறு­தி­யான நிலைப்­பாடு, மனித உரிமைப் பேர­வையின் இந்த முன்­னெ­டுப்பு கார­ண­மாக பய­னற்­ற­தா­கி­யி­ருக்­கின்­றது. இந்த நிலையில் கலப்பு விசா­ரணை பொறி­முறை, உத்­தேச உள்­ளக விசா­ரணை பொறி­முறை, இந்த பொறி­மு­றையில் எழக்­கூ­டிய சிக்­க­லான விட­யங்கள், விசா­ரணை முறைமை, சாட்­சி­களின் நிலைமை உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பாக மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி புவி­தரன் அளித்­துள்ள விளக்­கங்­களும் அவர் எழுப்­பி­யுள்ள வினாக்­களும் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. 

வவு­னி­யாவில் தமிழ் சிவில் சமூக அமையம் ஒழுங்கு செய்­தி­ருந்த கலந்­து­ரை­யா­ட­லின் ­போது அவர் தெரி­வித்த கருத்­துக்கள் இங்கு அர­சியல் தீப்­பொ­றிக்­காக தொகுத்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பரிந்­துரை ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யா­னது மிகவும் ஆரோக்­கி­ய­மா­ன­தொன்­றா­கவும், இலங்­கையில் 2002 இல் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­திக்குள் நடை­பெற்ற சம்­ப­வங்­களில், தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றை­களை விரி­வாக ஆராய்ந்­தி­ருக்­கின்­றது. 

இதன் மூலம், இலங்கை அர­சாங்­கத்­தினால் தமிழ் மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அதே போல் விடு­தலைப் புலி­க­ளாலும் போர்க்­குற்றம் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் மிகவும் முக்­கி­ய­மாக இலங்­கையில் உள்ள நீதி நிர்­வாகக் கட்­ட­மைப்பு இதனைக் கையாள்­வ­தற்கு தகுதி வாய்ந்­தது அல்ல எனவும் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றது. 

ஆக­வேதான், இந்த போர்க்­குற்றம் அல்­லது மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்றை விசா­ரணை செய்­வ­தற்கு ஒரு ஹைபிரிட் - கலப்பு விசா­ரணை பொறி­முறை ஒன்றை அமைப்­பது தொடர்பில் ஐ.நா. விசா­ரணை அறிக்கை மனித உரி­மைகள் பேர­வைக்கு சிபா­ரிசு செய்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­காவின் பிரே­ரணை இந்தப் பேர­வையில் 3 வரு­டத்­திற்கு ஒரு முறை உலக நாடு­களில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­படும் 47 நாடுகள் உறுப்பு நாடு­க­ளாக இருக்­கின்­றன. 

இந்தப் பேர­வையில் ஒரு விசா­ரணை தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது, அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். அந்தப் பிரே­ர­ணை­யையே அமெ­ரிக்கா கொண்டு வந்து, அதனை நகல் பிரே­ர­ணை­யாக சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. இதனை நான்கு நாடு­களின் அனு­ச­ர­ணை­யுடன் அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்­ளது. இந்தப் பிரே­ர­ணையின் முதல் நகல் வரை­புக்கு இலங்கை அர­சாங்கம் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தது. 

அத்­துடன், அதன் முக்­கிய சாராம்­சங்­களை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மாற்­றங்­களைக் கோரி­யி­ருந்­தது. அதனை அமெ­ரிக்­காவும் ஏற்­றுக்­கொண்டு, இன்று உள்­நாட்டு விசா­ரணை என்ற இடத்­திற்கு இந்தப் பிரே­ரணை வந்­தி­ருக்­கி­றது. ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்த ஹைபிரிட் - கலப்பு விசாரணை பொறி­முறை என்­பதை நீக்­கி­விட்டு, பொது நல­வாய நாடு­களின் நீதி­ப­தி­களும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களும் உள்­ளி­ணைக்­கப்­ப­டலாம் என்று இந்தப் பிரே­ர­ணையில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இத­னையும் சிலர் ஹைபிரிட் முறை­மைதான் என்று வாதி­டலாம். ஹைபிரிட் சிஸ்டம் - கலப்பு விசா­ரணை பொறி­முறை ஹைபிரிட் சிஸ்டம் என்­பது, இரண்டு விட­யங்கள் கலந்த ஒரு கலப்புப் பொறி­மு­றையைக் குறிக்­கின்­றது. இந்த முறை­மை­யி­லான ஒரு விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்­ப­தையே ஐ.நா. விசா­ரணை அறிக்கை பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது. ஆனால் உண்­மை­யாக உல­கத்தில் இதற்கு முன்னர் நியூட்­டன்பேக் ட்ரையல் சியா­ரா­லியோன், கம்­போ­டியா, பொஸ்­னியா, கிழக்குத் தீமோர் ஆகிய நாடு­களில் ஹைபிரிட் சிஸ்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

ஆனால் இந்த அனைத்து ஹைபிரிட் முறை­க­ளிலும் அந்த முறை­மையைத் தீர்­மா­னிப்­பதில் ஐக்­கிய நாடுகள் சபை அல்­லது சர்­வ­தேசம் ஒரு பங்­கா­ள­ராக இருந்­தது. நீதி­ப­திகள் எத்­தனை பேர் நிய­மிக்­கப்­பட வேண்டும், உள்ளூர் நீதி­ப­திகள் எத்­தனை பேர் நிய­மிக்­கப்­பட வேண்டும், நடை­மு­றையை யார் சொந்தம் கொண்­டா­டு­வது, இது யாரு­டைய கட்­டுப்­பாட்­டுக்­குட்­பட்­டது என்­பன உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு ஊடாக இவற்றில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இந்த உடன்­ப­டிக்­கைகள் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் அந்த நாட்­டுக்கும் அல்­லது ஐ.நா. பாது­காப்புச் சபை­யுடன் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதுதான் உலக நாடு­களில் பின்­பற்­றப்­பட்­டி­ருந்த உண்­மை­யான ஹைபிரிட் சிஸ்டம் அல்­லது கலப்பு விசா­ரணை பொறி­மு­றை­யாகும். ஆனால் இன்று எங்­க­ளுக்கு வரப்­போ­வது அவ்­வா­றா­ன­தொன்று அல்ல. இலங்கை அர­சாங்கம் முற்று முழு­தாக அதனைத் தனக்குச் சொந்­த­மாக்கி, தனது செயற்­பாட்டு முறை­மைக்குள் கொண்டு வர முயற்­சித்­தி­ருக்­கின்­றது, இதில் ஒன்­றி­ரண்டு பொது­ந­ல­வாயம் மற்றும் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும் உள்­வாங்கிக் கொண்டு செயற்­ப­டத்­தக்க வகை­யி­லான ஒரு முறை­மையை அமெ­ரிக்­காவின் இறுதி நகல் பிரே­ரணை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. 

இதன் கார­ண­மா­கவே, இலங்கை அர­சாங்­கமும் இந்தப் பிரே­ர­ணைக்கு அனு­ச­ர­ணை­யா­ள­ராக வரு­வ­தாகக் கூறி­யி­ருக்­கின்­றது. அந்தப் பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. ஆகவே ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இதனை நிறை­வேற்­று­வ­தற்கு, வாக்­க­ளிப்­புக்கு விடத் தேவை­யில்லை. ஏனென்றால் இலங்கை அர­சாங்கம் எந்­த­வி­த­மான எதிர்ப்­பு­மின்றி அதனை ஏற்றுக் கொண்டு செயற்­படப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

இந்த நிலை­மை­யி­லேயே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பிரே­ர­ணையை வர­வேற்­றி­ருக்­கின்­றது. இதனை ஆரம்பப் புள்­ளி­யாகக் கொண்டு நாங்கள் முன்­னோக்கி நக­ரலாம், அதே நேரத்தில் இது தொடர்பில் எங்­க­ளுக்கு வாக்­க­ளித்த சிலர் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தாலும் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டு முன் நக­ர­வேண்டும் என்று சுமந்­திரன் கூறி­யுள்ளார். இது தான் இன்­றைய நிலைமை. 

முரண்­பா­டுகள் அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பிரே­ர­ணை­யின்­படி, சர்­வ­தேசப் பொறி­முறை என்­பதும், சர்­வ­தேசக் கண்­கா­ணிப்பு என்­ப­தும் இதில் மிகவும் குறைந்­த­பட்­ச­மா­கவே காணப்­ப­டப்­போ­கின்­றன. ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்க்­கையில், ஐ.நா. அறிக்­கைக்கும் இந்த நகல் பிரே­ர­ணைக்கும் இடையில் பாரிய அக முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. 

இலங்­கையில் உள்ள நிர்­வாகக் கட்­ட­மைப்­பு­களால் இந்த விசா­ர­ணையை நடத்த முடி­யாது என்று ஐ.நா. அறிக்கை கூறு­கின்­றது. ஆனால், அந்த விசா­ர­ணையை இன்று இலங்கை அர­சாங்­கத்­திற்கே பொறுப்பு கொடுக்­கின்ற தன்மை அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பிரே­ர­ணையில் காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வ­தாக இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் விட­யத்தில், இலங்கை அர­சாங்கம், மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் ஆகிய தரப்­புக்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்கின்­றன. 

நியா­ய­மான விசா­ரணை என்ற அடிப்­ப­டையில் நோக்­கினால், உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச சட்ட மீறல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணையை இந்த இரு தரப்­புக்­களில் எந்­த­வொரு தரப்பும் விசா­ரணை செய்­கின்ற பொறுப்பை ஏற்றுச் செயற்­பட முடி­யாது. இவ்விரு தரப்­புக்­க­ளுக்கும் அப்­பாற்­பட்ட ஒரு வெளித் தரப்பே விசா­ர­ணையை நடத்த முடியும். அப்­போ­துதான் அது பக்­கச்­சார்­பற்­ற­தா­கவும், நீதியை நிலை­நாட்டக் கூடி­ய­தா­கவும், நியா­ய­மா­ன­தா­கவும் இருக்க முடியும். 

ஆனால், இங்கு, குற்றம் சாட்­டப்­ப­டு­கின்ற ஒரு தரப்பை, அதா­வது, தமிழ் மக்­களால் இவர்கள் தான் எங்­க­ளுக்கு அநீதி இழைத்­தார்கள் என்று கூறப்­ப­டு­கின்ற அர­சாங்கத் தரப்பை நீதி­ப­தி­யாக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இத்­த­கை­ய­தொரு வித்­தி­யா­ச­மான ஒரு விசா­ரணை பொறி­மு­றையை சர்­வ­தே­சத்தின் ஊடாக, இலங்­கையின் பொறுப்பில் விடு­வ­தற்கு அமெ­ரிக்­காவின் நகல் பிரே­ரணை மூல­மாக ஆலோ­சனை முன் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனை நாங்கள் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாகக் கருத வேண்டும். 

மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகக் கருதி அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்திச் செயற்­பட வேண்டும். விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளப்­போ­வது யார்? அடுத்­த­தாக, இந்தப் பொறி­மு­றையின் ஊடாக கொண்டு வரப்­ப­ட­வுள்ள நீதி­மன்­றத்தின் முன்னால் அல்­லது ஆணைக்­கு­ழுவின் முன்னால் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான விட­யங்­களைக் கொண்டு வரு­வ­தற்­கான விசா­ர­ணை­களை யார் மேற்­கொள்ளப் போகின்­றார்கள் என்­பது இரண்­டா­வது முக்­கிய விட­ய­மாக இருக்­கின்­றது. 

இந்த நாட்டில் உள்ள பொலிஸ் துறை­யி­னரோ அல்­லது உள­வுத்­து­றை­யி­ன­ரோதான் பெரும்­பாலும் இந்த விசா­ர­ணை­யா­ளர்­க­ளாக இருக்கப் போகின்­றார்கள். இது­வ­ரையில் உள்ள நிலை­மை­க­ளின்­படி, சிலவேளை­களில் வெளி­நா­டு­களில் இருந்து ஒன்­றி­ரண்டு விசா­ர­ணை­யா­ளர்­களை இதற்­கென கொண்டு வரலாம் என தெரி­கின்­றது. இதனால், தங்­க­ளுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­திய தரப்­பி­னரே எவ்­வாறு விசா­ர­ணை­களை நடத்த முடியும் என்ற முக்­கி­ய­மான பிரச்­சி­னையும் தமிழ் மக்கள் முன்னால் இப்­போது எழுந்து நிற்­கின்­றது. 

குற்றச் செயல்­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டைய தரப்­பா­கிய இலங்கை அரசு விசா­ர­ணை­யா­ள­ராக இருப்­பது என்­பது பூர­ண­மாக மாற்­றப்­பட வேண்டும். சட்­டமா அதி­பரின் பங்கு அடுத்­த­தாக வரப்­போ­கி­ன்ற விசா­ரணைப் பொறி­மு­றையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. இந்தத் திணைக்­களம் அர­சாங்­கத்தின் ஓர் அங்­க­மாகும். இலங்­கையில் அது அர­சாங்­கத்­திற்கு சட்டம் சம்­பந்­த­மான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கின்ற ஒரு நிறு­வ­ன­மாகத் தொழிற்­பட்டு வரு­கின்­றது. 

ஆகவே அர­சாங்­கத்­திற்கு அர­சாங்­கத்­தி­னு­டைய பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆலோ­சனை வழங்கி, நெறிப்­ப­டுத்­து­கின்ற சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை, அதே அர­சாங்­கத்­திற்கு எதி­ராகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள வழக்­கொன்றை நெறிப்­ப­டுத்­துங்கள் என்று எவ்­வாறு கூற முடியும்? வரப்­போ­கின்ற விசா­ரணை பொறி­மு­றையில் விசா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்­து­கின்ற பொறுப்பை இலங்­கையின் சட்­டமா அதிபர் திணைக்­க­ளமே ஏற்கப் போகின்­றது. 

இது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. சர்­வ­தேச பங்­க­ளிப்பு கொண்ட உட­ல­கம ஆணைக்­கு­ழு­வுக்கு நடந்­தது என்ன? இலங்­கையில் உட­ல­கம ஆணைக்­குழு என்ற விசா­ரணை குழு நிய­மிக்­கப்­பட்டு, திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­பவம் உள்­ளிட்ட சில முக்­கி­ய­மான கொலைச் சம்­ப­வங்­களைப் பற்றி விசா­ரணை நடத்­தப்­பட்­டது. இதில் சர்­வ­தேச நீதி­ப­தி­யான நீதி­ய­ரசர் பக­வதி உட்­பட மூன்று வெளி­நாட்­ட­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். 

இங்கு வழக்குத் தொடு­ந­ரா­கவும், வழக்கு விசா­ர­ணைகள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­ப­வ­ரா­கவும் சட்­டமா அதி­பரே செயற்­பட்­டி­ருந்தார். அப்­போது, இவ­ரு­டைய நடத்­தைகள் தொடர்பில் மிகவும் அதி­ருப்தி தெரி­வித்து மிகவும் கார­சா­ர­மான அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டு­விட்டு பக­வதி வெளி­யே­றி­யி­ருந்தார். நியா­ய­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அவ­ரு­டைய செயற்­பா­டுகள் தடைக்­கல்­லாக இருந்­தன என்று அந்த அறிக்­கையில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

ஆகவே இத்­த­கைய நிலை­மையில், வரப்­போ­கின்ற உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யா­னது, சுயா­தீ­ன­மான ஒரு தன்­மையைக் கொண்­டி­ருக்கும் என்று கூற முடி­யாது. சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­வதா? ஏனெனில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தென்­பது, எனக்கு நெருக்­க­டிகள் இருக்­கும்­போது நான் சுயா­தீ­ன­மாக இருக்க முடி­யா­மற்­போ­னது. ஆனால் இப்­போது நெருக்­க­டிகள் இல்லை. ஆகவே, சுயா­தீ­ன­மாக இருக்­கின்றேன், சுயா­தீ­ன­மாகச் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்ற கட­மை­களில் என்னை விடுங்கள் என்று கூறு­வதை ஏற்க முடி­யாது. அதே போன்று நாளை நான் சுயா­தீ­ன­மாக இருப்பேன் என்­ப­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

ஆகவே, இன்று நெருக்­க­டி­யான நிலை­மை­களில் அர­சாங்கம் மாற்­றங்­களைக் கொண்டு வந்­துள்­ளது என்­ப­தற்­காக இங்­குள்ள அரச துறை­களும், கட்­ட­மைப்­புக்­களும் சுயா­தீனம் அடைந்­தி­ருக்­கின்­றன என்று கருத முடி­யாது. மறு­பக்­கத்தில், சியாராலியோன் போன்ற உதா­ர­ணங்­களை இலங்­கைக்குள் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்கும் போது, முதலில் அந்த நாடு­க­ளு­டைய அனு­ப­வங்கள் வித்­தி­யா­ச­மா­னவை என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். 

கலப்பு விசா­ரணை பொறி­மு­றை­கூட, தனிப்­பட்ட முறையில் எங்­க­ளுக்கு ஒரு சரி­வ­ராத முறை­மை­யா­கவே நான் கருத வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் இந்த ஹைபிரிட் முறைமை கொண்டு வரப்­பட்ட நாடுகள் அனைத்­திலும் அவற்­றி­லி­ருந்த அர­சியல் கலா­சா­ர­மா­னது முற்று முழு­தாக அதன் பின்னர் மாற்­ற­ம­டைந்­தது. அவ்­வாறு மாற்­ற­ம­டை­வ­தற்­கான ஓர் அர­சியல் விருப்பு ஒன்று அங்கு இருந்­த­வர்­க­ளிடம் அப்­போது ஏற்­பட்­டி­ருந்­தது. 

பொஸ்­னியா, யுகொஸ்­லா­வியா போன்ற நாடு­களில் எல்லாம் நேட்டோ போன்ற நாடு­க­ளி­னு­டைய நெருக்­கு­வா­ரங்­களின் கார­ண­மா­கவே, அங்கு ஏற்­பட வேண்­டிய மாற்­றங்­க­ளுக்­கான நிலை­மைக்குள் தள்­ளப்­பட்டு, அதன் பின்னர் அங்கு ஏற்­பட்­டுள்ள இப்­போ­தைய நிலை­மைகள் உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் அந்த நிலை­மைகள் இலங்­கையில் இல்­லை­யென்­பதை மிக முக்­கி­ய­மாகக் கவ­னிக்க வேண்டும். இலங்­கையின் நிலைமை வேறு சியாராலியோன் ஒரு உள்­நாட்டுப் பிரச்­சி­னை­யைக் கொண்­டி­ருந்­தது. 

ஒரு தனிக்­கட்சி அர­சி­யலில் இருந்து பல­கட்சி மாற்­றத்­திற்­கான ஒரு போராட்­டமே அங்கு நடை­பெற்­றது. அப்­போ­ராட்டம் திடீ­ரென வெடித்த ஒரு போராட்ட நிகழ்வில் இருந்து, தொடர்ந்து வந்து – அதா­வது, 1995 ஆம் ஆண்டில் தொடங்கி 2002 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­தது. அங்­கேயும் ஐக்­கிய நாடுகள் சபை தன்­னு­டைய பங்கை வகித்­தி­ருந்­தது. ஆனால் இலங்­கையில் தமிழ் மக்­க­ளு­டைய நிலைமை வேறு­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது. 

அவர்கள் தமது அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவே கடந்த 60 வரு­டங்­க­ளாகப் போராடி வரு­கின்­றார்கள். இந்த நிலையில், இங்கு இன்று வரைக்கும் தமிழ் மக்­க­ளி­னு­டைய பக்­கத்­தி­லி­ருந்து நோக்­கும்­போது, இங்­குள்ள அர­சியல் கலா­சா­ரத்தில் தமிழ் மக்கள் நம்­பிக்கை கொள்ளக் கூடிய மாற்­றங்கள் எதுவும் ஏற்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­ய­வில்லை. சிலர் ஜன­வரி மாதம் 8 ஆம் திக­திக்குப் பின்னர் நாட்டில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­ற­னவே என சிலர் கூறலாம். 

அர­சியல் கலா­சார மாற்றம் ஏற்­ப­ட­வில்லை ஆனால் அந்த மாற்­றங்கள் எதுவும் தமிழ் மக்­க­ளுக்­காக ஏற்­பட்ட மாற்­றங்­க­ளல்ல. அவற்றை தமிழ் மக்­க­ளுக்­கான மாற்­றங்­க­ளாகக் கரு­தவும் முடி­யாது. அவை உண்­மையில் சிங்­கள மக்கள் மீதான நெருக்­கு­வா­ரங்­களில் ஏற்­பட்ட மாற்­றங்­களே. அந்த மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்­காகத் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் மேற்­கொண்­டி­ருந்த வாக்­க­ளிப்பு முறையின் மூலம், அவர்­க­ளுக்கு உதவி செய்து அவர்­களை நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து கை தூக்கி விட்­டார்­க­ளோ­யொ­ழிய, அவர்­க­ளுக்­கான மாற்­றங்­க­ளாக அவைகள் நிக­ழ­வில்லை. 

தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள நெருக்­கு­வா­ரங்­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்குப் பதி­லாக, அவற்றை இல்­லாமல் செய்­யு­மாறு கேட்ட போதெல்லாம் அந்த நெருக்­கு­வா­ரங்கள் - நெருக்­க­டி­க­ளுக்குள் மேலும் மேலும் அவர்­களை ஆழ்ந்து போகச் செய்­தார்கள். அந்த நிலை­யிலும், நாட்டில் ஒரு மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான உத­வியை, தமிழ் மக்க­ளிடம் அவர்கள் கேட்­ட­போது, அதற்கு அவர்கள் உதவி செய்­தி­ருந்­தார்கள். 

ஆனால் தமிழ் மக்­க­ளு­டைய நெருக்­க­டி­களைக் குறைப்­ப­தற்கோ இல்­லாமற் செய்­வ­தற்கோ எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யான நிலை­யாகும். எப்­படி முகம் கொடுக்கப் போகிறோம்? எனவே, இலங்­கையில் இருந்து வரு­கின்ற அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்­றங்கள் எதுவும் நிக­ழாத ஒரு சூழலில், போர்க்­குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்று இரா­ணு­வத்­தினர் மீது தொடர்ச்­சி­யாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

இந்த நிலையில் சனல் 4 இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை ஆதா­ரங்­க­ளுடன் வெளிப்­ப­டுத்­திய பின்னர் (அவற்றை இலங்கை அர­சாங்கம் பொய்­யா­னவை என்று மறுத்­தி­ருந்­தாலும்) நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அந்தப் பின்­ன­ணியில் ஐ.நா. விசா­ரணை அறிக்கை மேலும் உறு­தி­யான ஆதா­ரங்­க­ளுடன் குற்­றங்கள் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று ஆதா­ரங்­க­ளுடன் விசா­ரணை அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இந்த நிலை­யில்தான், இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய நற்­பெ­யரை நிலை­நாட்­டுவோம் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கூறி­யி­ருக்­கின்றார். 

அர­சியல் கலா­சா­ரத்தில் உண்­மை­யான மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கு­மே­யானால், ஐ.நா. அறிக்­கையில் ஏதோ சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது, நாங்கள் அதனை விசா­ரிக்க வேண்டும் என்­றா­வது அவர் திறந்த மன­துடன் கூறி­யி­ருக்க வேண்டும். அதை­வி­டுத்து எங்கள் இரா­ணு­வத்தின் நற்­பெ­யரை நிலை நாட்­டுவோம் என்று உலக அரங்­கில் கூறு­கின்ற நிலை­மையில், ஒரு உள்­நாட்டு விசா­ரணை பொறி­மு­றைக்­குள்­ளாக நாங்கள் அடுத்த கட்­டத்­திற்கு நகர முடி­யுமா என்ற ஒரு கேள்வி எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. 

இத்­த­கைய ஒரு சூழலில் பாரா­ளு­மன்­றத்தில் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பிர­தி­நி­திகள் இதனை ஏற்­றுக்­கொண்­டிக்­கின்­றார்கள். அப்­படி இருக்­கும்­போது, வரப்­போ­கின்ற ஒரு நிலை­மைக்கு நாங்கள் எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்றோம் என்ற கேள்­வியும் எழுந்­தி­ருக்­கின்­றது. கட்­டுப்­பா­டுகள் எது­வு­மில்லை அமெ­ரிக்­காவின் பிரே­ரணை மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் ஒரு வாய்­மொழி மூல­மான அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்க வேண்டும். 

அதன் பின்னர் எழுத்து மூல அறிக்­கை­யொன்­றையும் அவர் முன் வைக்க வேண்டும். இந்த இரண்டு செயற்­பா­டு­க­ளுக்­கு­மாக அவர் ஒரு மேற்­பார்­வையைச் செய்ய வேண்­டி­யி­ருக்கும். அதனைத் தவிர, அமெ­ரிக்க பிரே­ரணை வந்த பின்னர், இலங்­கையின் விட­யத்தில் சர்­வ­தே­சத்தின் அல்­லது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் நேர­டி­யான எந்­த­வொரு ஈடு­பாட்­டையும் காண முடி­ய­வில்லை. 

பொறுப்பு கூறு­வ­திலும், உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் சர்­வ­தே­சமோ அல்­லது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையோ இலங்­கையை நேர­டி­யாகக் கட்­டுப்­ப­டுத்­தத்­தக்க அம்­சங்கள் எத­னையும் காண முடி­ய­வில்லை. ஆகவே, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உண்­மை­யான நீதியை வழங்கக் கூடிய கடப்­பா­டு­களும் காணப்­ப­ட­வில்லை. சாட்­சி­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுமா? அடுத்­தது சாட்­சிகள் சம்­பந்­த­மா­னது. இலங்­கையில் விசா­ர­ணை­களை நடத்­தும்­போது, அவற்றில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் பாது­காக்­கப்­ப­டு­வார்­களா என்­பது ஒரு முக்­கிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. 

சாட்­சி­களைப் பாது­காக்கும் சட்டம் ஏற்­ப­டுத்­தப்­படப் போகின்­றது என்று அர­சாங்கம் கூறு­கின்­றது. இலங்­கையில் உள்ள சட்­டங்கள் நன்­றாக இருக்­கின்­றன. ஆனால் அவைகள் பார­பட்­ச­மான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­துதான் பிரச்­சினை. நியாயம் கேட்­கும்­போது ஏட்டில் எழுத்தில் உள்ள சட்­டங்­களைக் காட்­டு­வார்கள். ஆனால் அதனை அப்­ப­டியே நடை­மு­றைப்­ப­டுத்த மாட்­டார்கள். இதனை நாங்கள் பல வரு­டங்­க­ளாக நடை­மு­றையில் உணர்ந்து வந்­தி­ருக்­கின்றோம். 

எனவே அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்­தப்­படப் போகின்ற சாட்­சி­களைப் பாது­காக்கும் சட்டம் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படப் போகின்­றது என்­பதில் நியா­ய­மான நிறைய சந்­தே­கங்கள் இருக்­கின்­றன. சாட்­சிகள் விட­யத்தில் இன்­னு­மொரு பக்கம் இருக்­கின்­றது. நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சாட்­சி­க­ளாக இருக்­கின்­றார்கள். இவர்­களில் குடும்ப உற­வு­களை உற்­ற­வர்­களை இழந்­த­வர்கள் ஒரு பகு­தி­யினர். மற்றும் ஒரு தரப்­பினர் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்­த­வர்­களும், அவ­ய­வங்­களை இழந்­த­வர்­களும். இதை­விட இன்னும் ஒரு தரப்­பினர் - அவர்கள் பாதிக்­கப்­ப­டா­த­வர்கள். 

ஆனால் என்ன நடந்­தது என்­பதை சம்­ப­வங்­களை நேர­டி­யாகக் கண்டு தெரிந்து வைத்­தி­ருப்­ப­வர்கள். கண்­கண்ட சாட்­சிகள் வரு­வார்­களா? இவர்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், காணாமல் போன­வர்கள் விட­யத்தில் உற­வி­னர்­களும் சாட்­சி­ய­ம­ளிக்க முன் வரு­வார்கள். ஆனால் இங்கு நேர­டி­யாக சம்­ப­வங்­களைப் பார்த்து தெரிந்து வைத்­தி­ருப்­ப­வர்கள் சாட்­சி­ய­ம­ளிக்க முன் வரு­வார்­களா என்­பது கேள்­விக்­கு­ரி­யது. 

ஏனென்றால் சாட்­சி­யாகப் போனால் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும். தேவை­யற்ற அலைச்­சல்­க­ளுக்கு ஆளாக வேண்­டி­யி­ருக்கும் என்­றெல்லாம் எண்ணி அவர்கள் அஞ்­சு­வார்கள். இவ்­வாறு அஞ்சி ஒதுங்­கி­யி­ருக்­கின்ற ஒரு வழமை எம் மத்­தியில் எமது சமூ­கத்தில் தொடர்ந்து நிலவி வரு­கின்­றது. 

மிகவும் பார­தூ­ர­மான சம்­ப­வங்­க­ளுக்கு முகம் கொடுத்து பாதிக்­கப்­பட்ட சமூகம் என்ற வகையில், அந்தப் பாதிப்­பு­க­ளுக்கு நீதி கோரு­வ­தற்­காக இவர்கள் முன்­வ­ரு­வார்­களா என்­பது சந்­தே­கமே. பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போது பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரும்­போது – அவர்­களின் பாது­காப்பு உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் இவர்கள் என்ன செய்யப் போகின்­றார்கள் என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாகும். 

விசா­ர­ணையின் முக்­கிய அம்­ச­மா­கிய சாட்­சிகள் விட­யத்தில் இவ்­வா­றான நிலை­மைகள் இருக்­கும்­போது, விசா­ர­ணைகள் குறிப்­பிட்ட காலத்­திற்கு மேலாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூறும் காணப்­ப­டு­கின்­றது. விசா­ர­ணை­களை இழுத்­த­டிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கத் தரப்­பினர் தயங்­க­மாட்­டார்கள் என்­பது எங்­க­ளுக்கு ஏற்­க­னவே அனு­பவ ரீதி­யாகத் தெரிந்த விடயம் ஆகவே, இவ்­வா­றான நடை­முறைச் சூழலில் இந்த உள்­ளக விசா­ரணை எந்த அள­வுக்கு வெற்­றி­க­ர­மாக முன்­நோக்கிக் கொண்டு செல்­லப்­படும் என்­ப­திலும் கேள்­விகள் இருக்­கின்­றன. 

நீதித்­து­றையில் மாற்றங்கள் வருமா? இன்னுமொரு முக்கியமான விடயம் - பொதுநலவாய நீதிபதிகள் அல்லது வெளிநாட்டு விசாரணையாளர்கள் ஒன்றிரண்டு பேரை இலங்கை அரசாங்கம் தனது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்கினாலும், அவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சட்டங்களை, சட்ட விதிகளை, சட்ட நடைமுறைகளை எப்படி உள்வாங்குவது என்ற சட்டப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. 

அவற்றை உள்வாங்குவதற்காக இலங்கையின் நீதித்துறையில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை. இந்த விசாரணை பொறிமுறையில் விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படப் போகின்றார். அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவருடைய அதிகாரங்கள் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. மேன்முறையீடு செய்வது எப்படி? அதேநேரம், இந்த விசாரணைகளில் வரக்கூடிய மேன்முறையீடுகள் எங்கே செல்லப் போகின்றன என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும். இந்த மேன்முறையீடுகள் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் உள்ள சாதாரண நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுமா அல்லது அதற்கென விசேட நீதிமன்றங்கள் உருவாக்கப்படுமா என்பது தெளிவில்லை. 

மேன்முறையீடுகள் செய்ய வேண்டிய தேவையொன்று வரும்போது, எங்களுக்கென 2500 வருடங்களுக்கு மேலான நீதிப்பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம், எங்களுடைய நீதிமன்றங்களிலேயே அவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அரசாங்கம் சொல்லக் கூடும். 

அப்போது சர்வதேசமும் அதனை ஏற்றுக்கொண்டு ஆம் என்று தலையாட்டக் கூடும். அப்போது – பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இப்போதுள்ளது போன்று – அந்த மேன்முறையீட்டு வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்படலாம். ஆணையிட்டவர்கள் பொறுப்பு கூறுவார்களா? சாட்சிகள் மற்றும் விசாரணை முறைமைகள் இவ்வாறிருக்க, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பிலும் சிக்கல்கள் இருக்கின்றன. 

குற்றம் சுமத்தப்படுகின்ற சாதாரண சிப்பாய் தரத்திலானவர்கள் இந்த உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யலாம். ஆனால் ஆணையிட்டவர்களின் பொறுப்பு என்ற நிலையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கட்டளை அதிகாரிகள் விசாரணை செய்யப்படுவார்களா அல்லது அவர்களை விதிவிலக்காகக் கொண்டு இராணுவத்தினரின் சிப்பாய் தரத்திலானவர்களை விசாரணை செய்வதுடன் இந்த விசாரணைகள் நிறுத்திக்கொள்ளப்படுமா என்பதும் முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது. 

எனவே, உள்ளக விசாரணை என்பது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது. இவற்றின் ஊடாக ஓரளவுக்காவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே.