உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவம் குறித்த கலந்துரையாடல்கள் சில தினங்களில்
போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் வடிவத்தை தயாரிக்கும் நோக்கிலான தேசிய மட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் ஒரு சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிவரை நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடல்களின் மூலமாகவே அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை தயாரிக்கவுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள அடிப்படை வேலைத்திட்டத்தினை மக்கள் முன் வைப்பதுடன் அதன் பின்னர் கிடைக்கின்ற யோசனைகளையும், திட்டங்களையும் பரிசீலித்து இறுதி வடிவத்தை தயாரிக்கவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சர்வகட்சி குழுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணை அதன் பரிந்துரைகள் என்பன தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. இந்த சர்வகட்சி குழுக்கூட்டத்தின் பின்னரே அரசாங்கம் நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன் ஆலோசனைகளையும் பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
எனினும் அதன் பின்னர் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை பொதுநலவாய வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்கேற்புடன் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய விசாரணை நடத்தவேண்டுமென பரிந்துரை செய்தது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைவாக உள்ளக விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் இறுதி வடிவத்தை. தயாரிப்பதற்கு தேசிய மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
குறிப்பாக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணை பொறிமுறையில் உள்ளீர்க்கவேண்டும் என்றும் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் பொறிமுறையானது சுயாதீனமாகவும், நம்பகத்தன்மை மிக்கதாக அமையவேண்டும் எனவும் சர்வதேசத்தினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசத்தின் உதவிகளையும் தொழிலுட்ப ஆலோசனைகளையும் இலங்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணை பொறிமுறையில் உள்ளீர்க்க கூடாது என தென்னிலங்கையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே அரசாங்கம் எவ்வாறு இந்த உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை தயாரிக்க உள்ளது என்பது குறித்து ஆராயவுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய அடிப்படைத் திட்டத்தின் பிரகாரம் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். அதில் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் மற்றும் மதத் தலைவர்களைக் கொண்ட சபை என்பன உள்ளீர்க்கப்படும். அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பொறிமுறையொன்று நிறுவப்படவுள்ளது.
அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான அடிப்படைப் பொறிமுறையொன்றினை அரசாங்கம் தற்போது தயாரித்துள்ளது. அந்த அடிப்படை திட்டமே எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படவுள்ளது.
மேலும் அரசாங்கம் உருவாக்கவுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவானது தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசேட பண்புகளை உள்ளடக்கியதாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலேயே இன்னும் சில தினங்களில் இந்த தேசிய மட்டக் கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாரிவருகிறது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனுக்கும் இலங்கை வருமாறு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜனவரி மாதம் தொடக்கம் 18 மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் உள்ளக கட்டமைப்பு தொடர்பில் விளக்கமளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் முதலாவதாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும். அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது மத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் நீதியை பெறலாம் என கூறினார்.
தென்னாபிரிக்காவின் ஆலோசனையுடன் இதனை முன்னெடுப்போம். இரண்டாவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும். அடுத்ததாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும். இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இதுதான் நாம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே அரசாங்கம் உள்ளக விசாரணைக்கான இறுதி வடிவத்தை தயாரிப்பதற்கான தேசிய மட்ட கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்தவுள்ளது.








