Breaking News

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் இன்று

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் 69 ஆவது வரவு செலவுத்திட்டத்தை நேற்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூடியபின்னர், 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்திற்காக 9 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், விவாத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

குறிப்பாக இம்முறை வரவு –செலவுத்திட்டத்தை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்குவதற்காக எதிர்கட்சி தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.2016 ஆம் ஆண்டிற்கான வரவு –செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 3 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன், வரவு –செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.