Breaking News

15 பேர் அரசாங்கத்தில் இணையும் செய்தி பொய்! வாசு

தமது தரப்பிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதாக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என பொது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொது எதிர்க்கட்சியில் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக ஆளும் கட்சி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மெதம்வெல பிரதேசத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த மறுப்பை வெளியிட்டார்.குறித்த 15 உறுப்பினர்களுடனான பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இவர்களில் 6 பேருக்கு பதவிகள் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருந்தார்.

பதவிகள் வழங்கப்படவுள்ளமை குறித்து வாசுதேவ எம்.பியிடம் கேட்டபோது, இதுகுறித்து தான் அறியவில்லை எனவும், எனினும், பொது எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான தேவை தமது தரப்பில் யாருக்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.