Breaking News

விக்னேஸ்வரன் – சம்பந்தன் அவசர சந்திப்பு

வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று தற்போது கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கொழும்பு பம்பலப்பிட்டிய இசிப்பத்தான வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் பிரபல சட்டத்தரணியுமான கனகீஸ்வரன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த பல மாதங்களாக உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று கட்சியின் முக்கியஸ்தர்களினால் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் அது இன்று வரை பல காரணங்களினால் நடைபெறாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பு நடைபெறுவதை அறிந்த ஊடகவியலாளர்கள் தற்போது கனகீஸ்வரன் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் இணைப்பு- 

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. 

இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது  “நாங்கள் பல விடயங்களை சுமூகமாகப் பேசிக் கொண்டோம். கூடிய விரைவில் மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக பேசிக் கொள்வோம். மக்களின் நன்மைதான் எங்கள் இருவருக்கும் முக்கியமானது, ஆகவே அது சம்பந்தமாக தொடர்ந்து இருவரும் பேசிக் கொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது.

விரைவில் சட்டத்தரணி கனகீஸ்வரன் தலைமையில் இன்னுமொரு பேச்சுவார்த்தை நடைபெறும் என் முதலமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. இந்த நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய முன்னைய செய்திகள்

உதயமானது தமிழ் மக்கள் பேரவை -காணொளி இணைப்பு(இரண்டாம் இணைப்பு )

தமிழ்மக்கள் பேரவை ஏன் முதலமைச்சர் விளக்கம்(காணொளி இணைப்பு)