Breaking News

ரங்கண ஹேரத், ஜனித் பெரேராவிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி

காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய
தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர்.

போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காகவே குறித்த சூதாட்ட தரகர்கள் மேற்படி வீரர்களை அணுகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி.யின் விதிகளுக்கு அமைய கடுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இதுதொடர்பில் எவ்வித விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.