விக்கியிடம் கேட்ட மூன்று கேள்விகளும் அவரின் பதில்களும்
வடக்கு மாகாண சபையின் சில உறுப்பினர்களால் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை மூன்று தலைப்பின் கீழ் வழங்கியுள்ளார். முதலமைச்சரின் பதிலை அடுத்து முதலமைச்சரின் நிலைப்பாட்டை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
1.வினைத்திறனுள்ள மாகாணசபை செயல்முறை
மாகாணசபையினுடைய நிர்வாக அலகைப் பலப்படுத்துவதற்கான அனுபவம் வாய்ந்த இரு அலுவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் என்னுடைய அமைச்சின் சிரேஷ்ட உபசெயலாளர் திருமதி.விஜயலட்சுமி கேதீஸ்வரன் அவர்களும் உள்ளேற்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் பல விதங்களில் என் அமைச்சினுடைய வினைத்திறன் முன்னேற்றம் கண்டுள்ளது. செயல்திறனுடைய அலுவலர்கள் இருந்தால்த்தான் மாகாணசபை செயல்முறையை முறையாக முன்னெடுத்துச் செல்லலாம். அந்த விதத்தில் என்னுடைய அமைச்சு இப்பொழுது செயற்திறனுடன் செயற்படுகின்றது என்பது எனது கருத்து. அமைச்சர்கள் தங்கள் தங்கள் அமைச்சுக்கள் பற்றி எடுத்துரைப்பார்கள்.
அத்துடன் உறுப்பினர்கள் ஒவ்வாருவரும் பிரதேச செயலர் பிரிவு ஒன்றினை மேற்பார்வை செய்ய உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான மக்களிடம் கேட்டறிய வேண்டிய வினாக்கொத்து ஒன்றும் தயாரிக்கப்படுகின்றது. எந்தெந்த அமைச்சர்களுடன் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம்.
இதனை நான் தைப்பொங்கலின் முன்னதாக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முடிப்பதாக இருந்தது. எனினும் வேலைப்பழு காரணமாகத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவிரைவில் இவை சம்பந்தமான ஆவணங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும்.
தங்கள் கடமைகள் சார்பாக வாகனங்களை மாகாணசபையிடமிருந்து பெற்றுக் கொள்வது பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டுநர், எரிபொருள் சம்பந்தமாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இவ்வருடம் மாகாணசபையின் செயல்முறைகள் வினைத்திறனுடன் செயற்படும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
2.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குதல்
இப்பொழுதும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவையுடன் எனக்குத் தொடர்பிருந்தமையால் அதனைக் காரணங்காட்டி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முரணான வகையில் நடந்து கொள்ளப் பார்க்கின்றேன் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. 23.11.2015ல் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் என்னை இணைத்தலைவராகப் பதவி ஏற்குமாறு கோரியபோது நான் சில உறுதிமொழிகளைக் கேட்டிருந்தேன். அவர்கள் 03.12.2015 ந் திகதிய தமது கடிதத்தின் மூலம் பின்வரும் உறுதிமொழிகள் தந்திருந்தார்கள்.
• தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாற்றமுறாது.
• எந்த அரசியல் கட்சிக்கும் எதிராக இவ் அமைப்பு செயற்படமாட்டாது.
• தமிழ் மக்கள் பேரவையின் ஒரே இலக்கு தமிழ் மக்களின் உரிமை, நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றிற்காகப் பணியாற்றுவதும்.
இவ்வாறான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னரே நான் இணைத்தலைவராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். மேலும் இவ்வாறான அமைப்பின் குறிக்கோள்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனமும் ஒரே மாதிரியான இலக்கையே கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய குறிக்கோள் 2013ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி பின்வருமாறு –
1. தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.
2. புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்ப் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகப் கொண்டதுமான வடக்குக் கிழக்கு மாகாணங்களே தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
3. தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவார்.
4. தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
5. அதிகாரப் பகிர்வானது காணி, சட்ட ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவற்றிற்கு அப்பால் சென்று பிரிவினையை வலியுத்துவதற்கோ 13வது திருத்தச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்கோ தமிழ் மக்கள் பேரவை உறுதி பூணவில்லை. மேற் குறிப்பிட்ட கூட்டமைப்பின் குறிக்கோள்களை மையமாக வைத்தே கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்கள் பேரவை உள்ளடங்கலான அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்கின்றோம்.
3.அதிகாரப் பகிர்வு யோசனைகள் விடயத்தில வடமாகாண சபையின் பங்குபற்றுதல்
அதிகாரப் பகிர்வு பற்றிய யோசனைகளே எங்கள் எல்லோர் மனதிலும் நிறைந்து நிற்கின்றன. வடமாகாண சபை தனது கருத்துக்களைக் கூற வேண்டி வரும். எங்களிடையே கௌரவ பா.டெனிஸ்வரன், கௌரவ சிராய்வா, கௌரவ சயந்தன் போன்ற சட்டத் தரணிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களை உள்ளடக்கி எமது யோசனைகளைத் தயாரித்து அவற்றை உரியவர்களுக்கு நாமும் அனுப்பலாம். நாங்கள் யாவருமே தமிழ் மக்கள் சார்பாகவே அதிகாரப் பகிர்வு யோசனைகளை முன்வைக்க முயன்று வருகின்றோம். எமது யோசனைகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் 2013ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அவை நோக்கப்பட்டு உரிய முடிவுக்கு வரலாம்.
இது 2013ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து
இது 2013ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து
என்னுடைய ஞாபகத்தின்படி 2013ம் ஆண்டின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுய நிர்ணயம் என்ற பதம் இருந்த போதிலும் 2015ம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் காலத்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது இல்லை என்றே நினைக்கின்றேன்.பின்னையதின் வரைவைத் தான் ஒரு வெள்ளிக்கிழமை எனக்கு பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். அதைப் பரிசீலிக்க முன் சனிக்கிழமை காலையில் உத்தியோகபூர்வமாக மக்கள் முன்னிலையில் அது வெளியிடப்பட்டது.
ஆகவே 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் 2015ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றிடையே எந்தளவு வித்தியாசம் இருக்கின்றது என்பது பற்றி எங்களது சட்டத்தரணிகள் குழாம் பரிசிலித்துப் பார்ப்பதுநன்மை தரும் என்று எண்ணுகின்றேன். என பதிலளித்துள்ளார்.









