Breaking News

வடக்கு மாகாண ஆளுனர் பதவி விலகிச் செல்வது ஏன்?

தாம் இணங்கிக் கொண்ட காலப்பகுதிக்கு மேலதிகமாகவே, பணியாற்றி விட்டதால் தான், வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகிச் செல்ல தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார.

இது தொடர்பாக அவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில்,

”ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட போது, ஆறு மாதங்கள் இந்தப் பணியில் இருப்பதற்கே இணக்கம் தெரிவித்திருந்தேன்.நான் இணங்கிக் கொண்ட காலப்பகுதியை நிறைவு செய்து விட்டேன், உண்மையில் நான் இப்போது மேலதிகமாகத் தான் தங்கியிருக்கிறேன்.

இந்தப் பதவியை விட்டுப் போவதன் பின்னால் வேறு எந்த விடயங்களும் இல்லை. எனது ஓய்வுக்காலத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுனராக இவர் கடந்த ஒரு ஆண்டாகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.