Breaking News

ஆடை கட்டுப்பாடு தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

மாணவர்கள் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் ஆடைகளைத் தெரிவு செய்வதற்கும் அணிவதற்கும் உரிமை உண்டு, அதனைத் தடுக்கின்ற உரிமை எவருக்கும் இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது அப் பல்கலைக்கழகங்களிற்கு நிகராக அமைதியாக செயற்பாட்டு உயர்கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பினை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.

இந்த விடயம் எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் அண்மைக் காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உண்மைக்கு மாறான குறிப்பிட்ட ஆடைகளையே அணியலாம் என ஒரு கருத்து சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் நிலவி வருவதுடன் சர்வதேச ரீதியாகவும் அக்கறையுள்ளவர்களால் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இவ்வாறான அபிப்பிராயத்தை பூர்த்தி செய்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காக இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவின மாணவர்களும் கற்கின்றார்கள். அவர்களது ஆடைக் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற இனம் மதம், சூழல், நண்பர்கள், வாழ்ந்த பிரதேசம், மனோ நிலை ஆகியன ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஆனாலும் வாழ்கின்ற சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களது ஆடைத் தெரிவு, அணியும் முறை அமைந்திருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

ஆனாலும் ஒருவர் அணிகின்ற ஆடை, காலநிலை, சூழல், பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்களைப் பேணுதல் போன்ற அடிப்படைக் காரணங்களை அவர்களது ஆடைத்தெரிவு நடத்தை அமைந்திருக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்பார்க்கின்றது.

மாணவர்கள் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் ஆடைகளைத் தெரிவு செய்வதற்கும் அணிவதற்கும் உரிமை உண்டு. அதைத் தடுக்கின்ற உரிமை எவருக்கும் இல்லை.

ஆனாலும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சூழல் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆடைகள் அணிதல் வரவேற்கத்தக்கது.

இவ்வறிக்கையின் மூலம் மாணவர்கள் மீது ஆடை தெரிவு அணிதல் தொடர்பாக கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் எவரும் கதைப்பார்களாயின் எமது பல்கலைக்கழகத்தின் சுமூக செயற்பாடுகளை குழப்புகின்ற செயலாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருதும். ஊடகங்கள் இது தொடர்பான உண்மை நிலையை தெளிவுபடுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் பல்கலைக்கழகம் சார்ந்த விடயங்களை சரியாக உறுதிப்படுத்திய பின்னரே வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.