Breaking News

வடபகுதியில் 65,000 வீடுகளை நிர்மானிப்பது தொடர்பிலான சர்ச்சை முடிவுக்கு வந்தது!

இலங்கையின் வடபகுதியில் 65,000 வீடுகளை நிர்மானிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை கட்டுமான தொழில் துறையினரிற்கும் இடையில் காணப்பட்ட மோதலிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

வடபகுதியில் சர்ச்சைக்குரிய வீடுகளை அமைத்த நிறுவனத்திற்கு தொடர்ந்தும் அப்பகுதியில் வீடுகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த வகையில் இந்திய நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய வீடமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வடமாகாண முதலமைச்சரும், வடமாகணசபையும் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடபகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களிற்கு 65,000 வீடுகளை அமைப்பது தொடர்பில் நிலவிவந்த முரண்பாட்டிற்கு இலங்கை அரசாங்கமும் இலங்கையின் கட்டுமான தொழிற்துறையினரும் தீர்வை கண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியாவின் லக்ஸ்மி நிவாஸ் மிட்டல் நிறுவனம் வடக்கில் 65,000 வீடுகளை அமைக்கும் பணியை முன்னெடுக்கும். இலங்கையின் பாரிய கட்டுமான தொழிற்துறையை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பு நாட்டின் ஏனைய பகுதிகளில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும். இந்த ஏற்பாடு குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம், இலங்கையில் வீடமைப்பிற்கு பாரிய எதிர்காலம் உள்ளது, 500,000 வீடுகள் வரை தேவைப்படுகின்றன, என அதன் உறுப்பினர் ஓருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ம் திகதி இலங்கை நிதியமைச்சின் திட்டமிடல் பிரிவு 65,000 வீடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களுடன் வருமாறு. இலங்கையின் பாரிய கட்டுமான தொழிற்துறையை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது, அவர்களும் அதற்கான யோசனைகள் மற்றும் நிதிவளங்கள் குறித்த விபரங்களுடன் அங்கு சென்று அவற்றை சமர்ப்பித்திருந்தனர்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ள ஆர்ஸ்லர் மிட்டல் நிறுவனம் வடபகுதியில் குறிப்பிட்ட 65,000 வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது. வடமாகணசபையும், முதலமைச்சரும், தமிழ் தேசியகூட்டமைப்பு சூழலிற்கு உகந்தவிதத்தில் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள போதிலும் அதனையும் மீறி இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.