Breaking News

ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் திடீரென ரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

சூழல் பாதுகாப்பு தொடர்பான உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நான்கு நாள் பயணமாக, வரும் 21ஆம் நாள் அமெரிக்கா செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும், இந்தப் பயணம் கைவிடப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், செலவினங்களைக் குறைத்துக் கொள்வதற்கான தமது வெளிநாட்டுப் பயணங்களை குறைத்துக் கொள்ளப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் கூறியிருந்தார்.

அமெரிக்கப் பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்து, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.