ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும்!
சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் வலைவீசி தேடும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே மறைத்து வைத்துள்ளார். அவரது தாய்லாந்து விஜயத்தின் போது குறித்த விட யம் அம்பலமாகியுள்ளது.
எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவிடமும் ஜீ.எல்.பீரிஸிடமும் உடனடியாக வாக்குமூலம் பெற்று உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அத்துடன் இலாபமீட்டும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனது சுய நலனுத்திற்காக அரசுடைமையாக்கி மைத்துனர் மயப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷவாகும். மக்களிடமிருந்து கொள்ளையிட்ட பணத்தையே மே தினத்திற்கு பொது எதிரணியினர் செலவிடவுள்ளனர். தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில விக்கிரசிங்கவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை ஏற்படும். அடுத்த தேர்தல்கள் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நலின் பண்டார எம்.பி மேலும் குறிப்பிடுகையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது முன்னாள் ரஷ்ய தூதுவராக பதவி வகித்திருந்த உதயங்க வீரதுங்கவை சந்தித்து பேசியுள்ளார். இதன்போது முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரிஸூடன் இணைந்திருந்த எடுத்த புகைப்படம் வெ ளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ரஷ்ய தூதுவராக பதவி வகித்திருந்த உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றில் ஆயுதம் பரிமாற்றல் மோசடி பாரதூரமானதாக உள்ளது. மேலும் கொலை வழக்கில் சந்தேக நபராகவும் அவர் விளங்குகின்றார். இவர் மீதான விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் நிலையில் அவர் வெ ளிநாட்டில் தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து இலங்கை பொலிஸ் இன்டர்போலின் உதவியை தற்போது நாடியுள்ள தருவாயில் குறித்த புகைப்படம் வெ ளியாகியமை பெரும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது உறவினரான உதயங்க வீரதுங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மறைத்து வைத்துள்ளார். எனவே அவர் தொடர்பிலான அனைத்து தகவல்கள் மஹிந்த ராஜபக்ஷ அறிந்திருப்பார். தற்போது இடைநடுவே நிறுத்தப்பட்டிருக்கும் உதய வீரதுங்கவின் விசாரணைகளை மீளவும் ஆரம்பிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் உடனடியாக வாக்குமூலங்களை பெற்று இன்டர்போலின் உதவியுடன் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
எயார் லைன்ஸ் மோசடி
46 ஆயிரத்து 127 கோடி ரூபா நஷ்டத்தில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இயங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வே பிரதான காரணமாகும். அதிகளவில் இலாபமீ்ட்டும் நிறுவனமாக செயற்பட்ட விமான சேவை நிறுவனத்தை மைத்துனர் மயப்படுத்துவதற்காக அரசுடைமையாக்கினார். இதனால் தற்போதைய அரசாங்கம் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விமான தயாரிப்பு பணிகளை பொறுத்தமட்டில் எட்டு விமானங்களில் நான்கு விமானங்களுக்கான தயாரிப்பு பணிகளை அவசரமாக இடைநிறுத்தியுள்ளோம். எனவே நாட்டு மக்களின் சுமையை குறைக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசி்ங்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனியாருடன் கைகோர்த்து இலாபமீட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். எனினும் இதனை அரசியல் கருப்பொருளாக எடுத்து கொண்டு நாட்டின் உடைமைகளை தனியாருக்கும் விற்பனை செய்யும் திட்டத்தை மீளவும் ஆரம்பித்துள்ளதாக பொது எதிரணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். நாட்டின் பொருளாதார சீர்குலைப்பதற்கு பிரதான காரணங்களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் நட்டம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் கடன் தொகைகளை கொண்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை போன்று 10 நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க முடியும். மேலும் துறைமுக நகர் திட்டம் போன்று 2 நகர்களை உருவாக்க முடியும். மத்தள விமான நிலையம் போன்று 18 விமான நிலையங்களை நிர்மாணிக்க முடியும். எனவே இவையனைத்து முன்னைய ஆட்சியாளர் கொள்ளையிட்டுள்ளனர்.
இதனூடாக விமானத்தில் செல்வதனை கனவிலும் நினைத்திராத சாதாரண மக்கள் எயார் லைன்ஸின் கடனை போக்குவதற்கு 23 ஆயிரத்து 63 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்.
மே தினம்
திருடர்கள் ஒன்று கூடும் களமாக இம் முறை பொது எதிரணியின் மே தினம் மாறியுள்ளது. நாடு முழுவதிலிருந்தும் மக்களை திரட்டுவதற்கு ஒரு அமைப்பாளருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் முன்னைய அட்சியின் கொள்ளையிடப்பட்டவையாகும். ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் போன்ற இலாபமீட்டி கொண்டிருந்த நிறுவனத்தை மைத்துனர் மயப்படுத்தியமை ஊடாக கொள்ளையிடப்பட்ட பணங்கள் மே தினத்தின் போது செலவிடப்படுகின்றது.
மைத்திரி்க்கும் ரணிலுக்கும் ஒப்பந்தமில்லை.
ஐந்து வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை. அடுத்த தேர்தலின் போட்டியிட போவது தொடர்பில் இதுவரைக்கும் பேசவும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில விக்கிரசிங்கவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.