பொருத்து வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் மிட்டல் நிறுவனத்துக்கே – சுவாமிநாதன்
வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்தப் பணியை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
”இந்த திட்டத்தின் முதற்கட்டத்துக்கு அமைச்சரவை கடந்த பெப்ரவரியில் அனுமதி அளித்து விட்டது.உருக்கினாலான இந்த பொருத்து வீடுகளை அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முழுமையான வசதிகளுடன் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் முதலாவது பாரிய திட்டம் இது.இந்திய வீடமைப்புத் திட்டம் போன்ற முன்னைய வீடமைப்புத் திட்டங்களில், உரிமையாளர், தரம்குறைந்த கட்டப்பொருட்களைப் பயன்படுத்தியும், கடன் வாங்கியும் வீடுகளை அமைக்கும் நிலை காணப்பட்டது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தில், கட்டப்பட்ட வீடுகள் ஒழுங்காக பூசப்படவில்லை. யன்னல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மரம் தரம்குறைவானது. இந்த வீடுகளில் பல குறைபாடுகள் உள்ளன.
இது இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்து அல்ல. அவர்கள் எமக்கு பெரிய உதவியை செய்துள்ளனர். ஆனால் இந்தியாவின் வீடுகள் முற்றிலும் வெற்றிகரமானவை அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








