தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்!
தமிழ் சமூகம் இழந்ததை எண்ணிவருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோட வேண்டும். இந்த உலகில் நாம் எவருக்கு சலைத்தவர்கள் அல்ல. எங்கள் பூமியை வெற்றி பூமியாக உருவாக்க வேண்டும். நேற்று நடந்ததை விட்டு நாளை நடப்பதற்காக வாழ இந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களாக ராஜா, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சமூகம் புதுமையை நோக்கி நடைபோடவேண்டும். பழமை வேண்டாம் என்ற அபிலாசைகள் இல்லை. பழமையை மறக்கமால் புதியதை விரும்புகின்ற சமூகம் தான் உலகில் மற்றவையவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும் என்றார்.
இதில் மகிழ்ச்சி கரமான வாழ்க்கைக்கு இன்றைய காலத்தில் அவசியமானவை தொன்று தொட்டு வரும் பழமைகளா? மாறிவரும் புதுமைகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றன.
இதன் போது இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களாக ராஜா, மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.








