Breaking News

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு



காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள சிறப்புப் பணியகத்திடம் வரும் ஜூலை 15ஆம் நாளுக்குள் ஒப்படைக்குமாறு  அரசாங்கம் கோரியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்கு, சிறப்புப் பணியகம் ஒன்றை அமைக்க  அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தச் சிறப்புப் பணியகத்திடமே, ஏற்கனவே காணாமற்போனோர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 15ஆம் திகதிக்குள் இந்த ஆவணங்களை புதிய பணியகத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரியிருப்பதாகவும், ஆனால், இதுதொடர்பான பணிகளை நிறைவு செய்வதற்கு தாம், ஓகஸ்ட் 30 ஆம் நாள் வரை கால அவகாசம் கேட்டிருப்பதாகவும், ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

ஜெனிவாவில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில்,  அரசாங்கம் இடைமாற்றுக்கால நீதி தொடர்பாக இணங்கியிருந்த நான்கு விடயங்களில், காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தை அமைத்தலும் ஒன்றாகும்.