ஐ.நா. பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படுவது உறுதி ! மனோ கணேசன்
அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படுவது உறுதியாகும். உள்நாட்டில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும் அதனை தட்டிக்கழித்துவிட முடியாதென தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த, பொறுப்புக்கூறல் குறித்த விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு இடம்பெறுவது நிச்சயமானது. எனினும், உள்நாட்டு நீதித்துறை சுயாதீனமாகியுள்ள நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்பு எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் மற்றும் மனித அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்குவது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முன்னைய காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் தற்பொழுது எனது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போதைய நிலையில் தலைமைத்துவ மட்டத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிமட்டத்தில் அந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.
குறிப்பாக சிவில் சமூக நிறுவனங்கள் கடந்த அரசாங்கத்தில் நடத்தப்பட்டதைப் போன்று நடத்தப்படுவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் எனது அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அமைச்சுக்கு வந்த பொலிஸார் செயலாளரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
இச்சம்பவம் நடந்தபோது நான் அமைச்சில் இருக்கவில்லை. கேள்விப்பட்டவுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியைத் தொடர்புகொண்டு எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் காணாமல்போனோரின் உறவினரின் வீடுகளுக்கு தவறான நேரத்தில் சென்று பொலிஸார் கதவைத்தட்டிய சம்பவங்களும் அவர்களை மரணச்சான்றிதழைப்பெறுவதற்கு அழுத்தமளித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு அதற்கு தீர்வாக காணாமலாக்கப்பட்டோர் சான்றிதழ் வழங்குவதற்கான இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் முன்னரைப்போன்ற நிலைமைகள் தற்போதில்லை. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எவ்விதமான தடையுமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
என்னைப்பொறுத்தவரையில் நான் கடந்த காலத்தில் ஒரு சிவில் செயற்பாட்டாளனாகவே செயற்பட்டிருந்தேன். நெருக்கடியான காலகட்டத்தில் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்கள் எனக்குண்டு. இதனால் என்னுடன் இணைந்து செயற்பட்ட நடராஜா ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் உயிர்களும் பறிக்கப்பட்டன. எவ்வாறோ நான் தப்பித்து உங்கள் முன்னிலையில் அமைச்சராக பேசிக்கொண்டிருக்கின்றேன்.
என்னைப்பொறுத்தவரையில் நான் சிவில் சமூகத்தினருடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை.
தற்போது கூட பல விடயங்கள் குறித்து நான் அவர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்துள்ளேன். எதிர்காலத்திலும் நன்மையான விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள் ளேன்.
இந்த நாட்டில் நீதிச்செயற்பாடு உள்ளிட்ட முக்கியமான விடயங்களை கையாள்வதற்கு வெவ்வேறு அமைச்சுக்கள் காணப்பட்டாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற மிகமுக்கியமான விடயம் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை எந்த தடைவந்தாலும் முன்னெடுப்பேன் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. இச்செயற்றிட்டத்தில் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு நிச்சயம் காணப்படும். அதேநேரம் மாவட்ட மட்டங்களில் சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதன்போது பொலிஸார் வீணான தலையீடுகளை மேற் கொள்ளாது விலகியிருப்பது குறித்து சட் டம் ஒழுங்கு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன் என்றார்.








