Breaking News

இந்திய அழுத்தத்தினால் கச்சதீவு தேவாலய கட்டுமான பணி நிறுத்தப்படவில்லை

கச்சதீவில் புதிய தேவாலய கட்டுமானப் பணிகள், இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

இந்திய அரசின் அழுத்தங்களினால், கச்சதீவு தேவாலய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக,இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நேற்றிரவு பிபிசிக்குத் தகவல் வெளியிட்ட,இலங்கை கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி, காலநிலை உள்ளிட்டசில காரணங்களுக்காகவே, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

”யாழ். ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே, கச்சத்தீவில் புதிய தேவாலயத்தைக் கட்டும் பணிகள் கடந்தவாரம் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் அங்கு தற்போது பெய்துவரும் கடும் மழை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடையூறாக இருக்கிறது நிர்மாணப் பணியை தொடர்வதற்கு அத்திவாரம் காயும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.இந்த இரண்டு காரணங்களினாலேயே தேவாலய கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும்”என்றும் அவர் தெரிவித்தார்.