தமிழர்களுக்காக யாழ். சென்ற முதல் இந்திய பிரதமர் தானே! நரேந்திர மோடி
இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் தானே என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது.அத்துடன், இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து தமிழர்களையும் காப்பாற்றியது தாமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போலவே தமிழ் நாட்டில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போதும் தமது அரசாங்கம் விரைந்து உதவிகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.இந்நிலையில், தமிழ் நாட்டில் பிரதான இரு கட்சிகளினாலும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது. இது வரையிலும் மோசமான அரசாங்கம் ஒன்றினையே தமிழ் நாட்டு மக்கள் பார்த்து வந்துள்ளனர்.
எனவே, இந்நிலை மாற வேண்டுமாயின் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அதன் மூலமே நல்ல அரசாங்கம் ஒன்றை தமிழ் நாட்டு மக்கள் அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








