Breaking News

அரசாங்கம் ஐ.நா.விற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!



பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்க ப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், பிரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்களில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்றவேண்டடுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி அல்லது வழக்கு விசாரணைகள் இன்றி ஒருவரை தடுத்துவைக்க முடியாத குற்றவியல் சட்டங்களை கையாளவேண்டும் என்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் குற்றவாளிகளுக்கு மதிப்பளித்தல் என்ற அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சிலவற்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் உள்ள சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதுடன், சிலர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சட்டத்துக்கு முரணான வகையில் தடுத்துவைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.