கிழக்கு முதல்வரை விருந்துக்கு அழைத்த கடற்படை
திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த மதியபோசன விருந்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொண்டார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன், இலங்கையின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன் நேற்று திருகோணமலை சென்றிருந்தார் அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு கொண்ட அவர்களுக்கு திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தில் மதியபோசன விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்துபசாரத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டும் அழைக்கப்பட்டிருந்தார். சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த மாதம் 20ஆம் நாள் நடந்த நிகழ்வில் கடற்படை அதிகாரியை இழிவுபடுத்தியதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சரை தமது முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என்றும் சிறிலங்காவின் முப்படைகளும் கடந்த 26ஆம் நாள், முடிவெடுத்திருந்தன.
எனினும், கடற்த மாதம் 30ஆம் நாள் இந்த முடிவுகளை முப்படைகளும் மாற்றியிருப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே, நேற்று கடற்படையினர், கிழக்கு முதலமைச்சரை விருந்துக்கு அழைத்திருந்தனர்.








