இராணுவத்தினர் வசமுள்ள வட்டகச்சி பண்ணையை விடுவிக்குமாறு கோரிக்கை!
வடக்கு விவசாயிகளின் நன்மை கருதி, இராணுவத்தினர் வசமுள்ள வட்டகச்சி விதை உற்பத்தி பண்ணை மற்றும் கிளிநொச்சி சேவைக்கால பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றை விடுவித்துத் தருமாறு, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (சனிக்கிழமை) வட மாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் துமிந்தவிடம் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பு குறித்து மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்-
”வட மாகாணத்தின் விவசாய அபிவிருத்தியில் நாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதில் பிரதானமாக இலங்கை விவசாய சேவையில் எங்களுக்கு 22 ஆளணிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தபோதும் 5 பேர் மாத்திரமே தற்போது சேவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, தற்போது 17 பேரை நியமிப்பதற்கு ஆவன செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். இதற்காக தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு தனியான ஒரு பரீட்சையை நடத்துமாறும் கேட்டிருக்கின்றோம். இது தவிர விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் வெற்றிடம், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அத்தோடு, வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணையில் பெரும்பகுதி இன்று படையினர் வசமே உள்ளது. இதனை விடுவித்துத் தருமாறும், இராணுவத்தின் வசமுள்ள கிளிநொச்சி சேவைக்கால பயிற்சி நிலையம் மற்றும் வெள்ளாங்குள பண்ணையையும் எம்மிடம் கையளிக்குமாறும் கோரியுள்ளோம்.
இலங்கையில் சின்ன வெங்காயம் இன்று வடக்கிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அறுவடை காலத்தில் இந்தியாவில் இருந்து அதிகளவு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், எமது விவசாயிகளுக்கு சந்தையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் போகின்றது. இதனால், இறக்குமதி வெங்காயத்துக்கு அதிக வரி விதிக்குமாறும், இதற்கு நிரந்தரத் தீர்வொன்றை காணவேண்டும் என்றும் கோரியுள்ளோம். அதற்கு மத்திய அமைச்சர், உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாக கூறிச் சென்றிருக்கிறார்.
இதேவேளை, இலங்கையில் உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒவ்வொன்றும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், 7 விவசாயப்பூங்காக்கள் இலங்கையில் நிறுவப்பட இருப்பதாகவும், வடக்கில் அதன் அமைவிடம் தொடர்பாக எங்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டி ரஞ்சன், மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாய பணிப்பாளர்கள் அ.செல்வராசா, தெ.யோகேஸ்வரன், அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.








