Breaking News

‘எனக்கு முன் விடுதலையான 2,200 பேர்!’ -ஆணையத்தை அதிர வைக்கும் நளினி



தேசிய மகளிர் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி. ‘ சிறையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன். என்னுடைய விடுதலை உங்கள் கைகளில் உள்ளது’ என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் அவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கிறார் நளினி. இவரோடு இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் வழியாக, தேசிய மகளிர் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் நளினி. அந்தக் கடிதத்தில், ‘ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டேன். 1998-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டன. 

இந்த வழக்கு தடா சட்டத்தின்படி நடைபெற்றதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் முடிவில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான் உள்பட நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனையும் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நேரத்தில், நான் கர்ப்பிணியாக இருந்தேன். சிறையில்தான் என் மகள் பிறந்தாள். என்னுடைய நிலையை அறிந்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் மோகினி கிரி தலையிட்டதால், என்னுடைய தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தற்போது என் மகள் வெளிநாட்டில் தங்கியிருக்கிறாள். அவளுடைய திருமணத்தை என்னால் முன்னின்று நடத்த முடியுமா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் அடைபட்டிருக்கும் ஒரே பெண் கைதி நான் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் முன்விடுதலை என்ற பெயரில் ஆயுள் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஏழு ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரையில் சிறைவாசத்தைக் கழித்தவர்களுக்கு முன்விடுதலை அளிக்கப்பட்டு வந்தது. என்னையும் அவ்வாறு விடுதலை செய்வார்கள் எனக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம். என்னுடைய விடுதலையும் தள்ளிப் போகிறது. எனக்குப் பின்னால் கைது செய்யப்பட்டவர்களில், 2,200 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். இதனால் தொடர்ச்சியான மனஅழுத்தத்திற்கு ஆளாகி வருகிறேன். எங்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. எனக்கிருக்கும் ஒரே நம்பிக்கை தேசிய மகளிர் ஆணையம் மட்டும்தான். என்னை விடுதலை செய்து, என் மகளோடு சேர்த்து வைக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’ என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் நளினி.

சட்டரீதியான போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், ‘ ஒரு பெண் என்ற அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் உதவி செய்யும்’ என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் நளினி.

-ஆ.விஜயானந்த்