Breaking News

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; நாடு முழுவதும் விண்ணதிரும் போராட்டங்கள்



சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்ப ட்டு வருகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்களால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 க்கு ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கண்டி வீதியூடாக ஐ.நா அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது.

இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனுவொன்றையும் கையளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பேரணியில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்படவர்களது உறவினர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துகொண்டுள்ளதுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் போன எமது உறவுகள் எங்கே, வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டனர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி முறையே அவசியம் போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்புக்களால் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு களனியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, காணாமல் போனோரின் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.