யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை!
நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்திலும் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மாதாந்த இழப்பீட்டுப் படியை அதிகரிக்க வேண்டும், சேமலாப நிதி, நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இரண்டு சுற்று நிரூபங்களை வெளியிட்டுள்ளது.
இதனால் தொழிற்சங்கப் போராட்டமானது இன்று மேலும் தீவிரம் அடைந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தக் காலப்பகுதியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்த சில ஊழியர்களும் இன்று மதியத்துடன் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சப்பிரகமுவ மற்றும் இரஜரட்ட பல்கலைக்கழகங்கள் முழுமையாக கல்வி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப்பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








