Breaking News

நோர்வே பிரதமர் இலங்கை தலைவர்களைச் சந்திக்கிறார்



விடுமுறையைக் கழிப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க், சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க், நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். விடுமுறையைக் கழிப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே, அவர் குடும்பத்துடன் கொழும்பு வந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் முடிவில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்புகள் அடுத்த வாரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எனினும் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

வரும் 12 அல்லது 13ஆம் நாள், சிறிலங்கா, நோர்வே தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.