மலையக மக்கள் கொழும்பில் போராட்டம்
சம்பள உயர்வை கோரி மலையகமெங்கும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் விவகார அமைச்சிற்கு முன்பாக நடைபெற்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவந்து, சம்பள உயர்வு வழங்கப்பட்டுவந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக ஆக்ரோஷமடைந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்துவருகின்றனர்.