Breaking News

மாணவர்கள் படுகொலை – ஒருவாரத்தில் விசாரணை அறிக்கை


கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை தேசிய காவல்துறை ஆணைக்குழு நியமித்துள்ளது.

பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆனந்த விஜேசூரியவை உள்ளடக்கிய இந்த விசாரணைக் குழு நேற்று யாழ்ப்பாணம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நிறுத்துமாறு இடும் உத்தரவை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்படவில்லை.

குற்றமிழைத்தவர் என்பதை உறுதி செய்யாத வரையில், எந்த விடயம் தொடர்பாகவும் நிராயுதபாணியான எவரையும் சுடுவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை.

தடுப்பிலுள்ள சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றால் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.

யாழ். மாணவர்களின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் தேசிய காவல்துறை ஆணைக் குழுவின் அறிக்கை ஒரு வாரகாலத்தில் கையளிக்கப்படும்.

காவல்துறையினர் குற்றமிழைத்தது கண்டறியப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  மாணவர்களின் மரணம் மற்றும் சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தனியான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.