நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் "எழுக தமிழ்' பேரணியைத் தடுத்திருப்பேன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்காது காலத்தை கடத்திவரும் மைத்திரி - ரணில் அரசாங்கம், தமிழ் மக்களை திசைத் திருப்புவதற்காகவே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பயன்படுத்தி எழுக தமிழ் என்ற பெயரில் இனவாதத்தை தூண்டும் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய பிரத்தி யேக ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியல் வங்குரோத்து நிலைக்கு வட மாகாண முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளதாலேயே எழுக தமிழ் பேரணியை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
” அரசியலில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காகவே எழுகத் தமிழ் பேரணியை நடத்தியிருக்கின்றார். வட மாகாண முதலமைச்சர் மற்றும் எழுக தமிழ் பேரணியை நடத்திய தலைவர்கள் இனவாதத்தை கக்கிய போதிலும், அதில் கலந்துகொண்ட மக்கள், தமது அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியே ஈடுபட்டிருந்தனர். அதேவேளை நான் ஆட்சியில் இருந்திருந்தால் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட எழுக தமிழ் போன்ற இனவாத பேரணிக்கு இடமளித்திருக்க மாட்டேன்” - என்றார்.
தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட மஹிந்த, வடக்கு முதலமைச்சரைக் கொண்டு எழுக தமிழ் பேரணி என்ற பெயரில் ஒரு சதித்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
'வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஓர் இனவாதி என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அரசியலையே செய்கின்றார். அரசாங்கத்திற்கு அவரால் அழுத்தம் கொடுக்க முடியாதுள்ளது. தமிழ் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா? வீதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளனவா? இடம்பெயர் முகாம்களில் ஒன்றாவது மூடப்பட்டுள்ளதா? மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதா? மீனவர்களுக்கு தொழிலுக்குச் செல்ல இடமளிக்கப்படுவதில்லை. மீனவர்களுக்கு நிவாரணமும் இல்லை. மற்றவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு சர்வதேச கடல் எல்லையிலிருந்து நாட்டின் கரையோரமாக 3 மைல் தூரம் வரை கடற்படை பின்வாங்கியிருக்கிறது. 30 வருடமாக மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலிருந்த வடக்கு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்திக்கொடுத்தோம்.
ஆனாலும் வடமாகாண முதலமைச்சருக்கு இவற்றை செய்ய முடியாதிருக்கிறது. அரசாங்கத்தினாலும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாதிருக்கிறது. ஆகவே இந்தப் பிரச்சினைகளை வேறுபக்கம் திசை திருப்பவே இனவாதம் பிரயோகிக்கப்படுகிறது. அப்போதுதான் மக்களுக்கு இந்தப் பிரச்சினைகள் மறந்துபோவார்கள். இதுவே யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை. சாதாரண மக்களின் இப்படிப்பட்ட பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கே மக்கள் மூளைச்சலவை செய்து திசைதிருப்பப்படுகிறார்கள்.
முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து இதனையே செய்திருக்கிறார். அவர்களுக்கு இவ்வாறு பேரணி செய்ய உரிமை உள்ளது. ஆனால் வட மாகாண முதலமைச்சர் அங்கு ஆற்றியிருந்த உரை மிகவும் பயங்கரமானது. இதனால் இனங்களுக்கு இடையே பிளவு ஏற்படுகிறது. சாதாரண மக்களின் பிரச்சினைகள் மூடிமறைக்கவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் வடக்கு முதலமைச்சர் இனவாதி என நான் நினைக்கவில்லை எனக் கூறினார்.