விஷ ஊசி தொடர்பில் 146 முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திகதியும், இரண்டாம் வாரம் 9 ஆம் திகதியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16 ஆம் திகதியும், நான்காம் வாரம் 23 ஆம் திகதியும், ஐந்தாம் வாரம் 30 ஆம் திகதியும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் வடமாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்றன. அதில் யாழ். மாவட்டத்தில் 29 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 81 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 146 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 2 ஆம் திகதி 26 பேரும், 9 ஆம் திகதி 47 பேரும், 15 ஆம் 16 ஆம் திகதிகளில் 22 பேரும், 23 ஆம் திகதி 30 பேரும், 30 ஆம் திகதி 21 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.