Breaking News

அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு



போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தம்முடன் கலந்துரையாடக் கூட விரும்பவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை ஒன்றுபடுத்த தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுவது குறித்து, மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்ப்பட்டது.

அதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்று மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.

“ பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் நான் அரசியல் செய்யவில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் முதலில் கொடுத்தேன்.

துரதிஷ்டவசமாக மக்களின் தேவைகளை தவறாக மதிப்பிட்டு விட்டேன். வடக்கிலுள்ள தமிழர்கள் 2015இல் எனக்கு எதிராக வாக்களித்தனர்.

இதில் அரசியல்வாதிகளும் புலம்பெயர்ந்தோரும் செல்வாக்குச் செலுத்தினர்.

அரசியல் தீர்வு நோக்கி செல்வதற்கு நான் சம்பந்தனுக்கும், ஏனைய அரசியல்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன்.

அந்த நேரத்தில் அவர்கள் என்னுடன் இணைந்து எதையும் செய்ய விரும்பவில்லை.

என்னுடன் கலந்துரையாடுவதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை.” என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.