Breaking News

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறையில் ஆர்ப்பாட்டம்



ஸ்ரீலங்கா அரசே தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தா எனக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறை திருக்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை அமைதியான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் தொடர்பான எந்தத் தகவல்களும் தங்களுக்கு இதுவரை நல்லாட்சி அரசாங்கத்திலும் கிடைக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் வீதியில் உல்லாசமாகத் திரிகின்ற போது, குற்றம் செய்யாத எமது உறவுகள் இதுவரை எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியாத நிலையில் இருக்கின்றோம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பினர்.

அரசே எங்களது பிள்ளைகளை உடனே விடுதலை செய், ஐக்கிய நாட்டு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து எமது உறவுகளை விடுதலை செய், இலங்கை அரசே எமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தா, அடையாள உண்ணாவிரதத்தை ஏற்றுக்கொள், ஓ.எம்.பி காரியாலயம் திறப்பதற்கு இலங்கை அரசே கைச்சாத்திடவேண்டும், இன, மத, பேதமின்றி இலங்கை முழுவதுமே காணாமல் போனது நடந்துள்ளது, இனிமேல் வரும் சந்ததிக்கு இது வேண்டும் என்ற சுலோக அட்டைகள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.